Sunday 10 January 2016

நெனப்பு வந்துச்சு அவனுக்கு : பாகம் – 3 (GW 54 – மாடக்குளம்)...


பசுமைநடையில இருந்து இந்த தடவ 54-வது நடையா மாடக்குளம் போறதா sms வந்ததும், 30 வயசு மனசு தடதடன்னு 20-25 வருஷம் பின்னாடி போய் தண்டவாளம் வழியா நடந்து கொவ்வாலி மலைக்குப் போனது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


கொவ்வாலிமலை, மாடக்குளம் கம்மா, கோர வாய்கா, 12-ம் பாலம், செம்மண் பிச்சு, கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டரு, அம்மாசிக் கிணருன்னு சின்ன வயசுல விழுந்து, கிடந்து, விளையாண்டு, குளிச்சு, சுத்தினு எல்லாம் நெனப்பு வர மனசெல்லாம் பூத்துக் கெடந்தது அவனுக்கு.


வீட்ட ஒட்டினாப்ல இருக்கிற, மதுரையில இருந்து போடிக்கு போற தமிழ்நாட்டோட கடைசி மீட்டர் கேஜ் ரயிலு தண்டவாளம் தான் அவங்க ஏரியாவுக்கே கக்கூசு. அதுல அவன் வீட்டுக்கிட்ட இருக்கிறது ஆறாம் பாலம். கொவ்வாலி மலை பன்னெண்டாம் பாலம் தாண்டியிருக்கு. வெளிக்கி இருக்கிறதுக்கு எத்தனாம் பாலம் தூரம் போறோங்கறத பொறுத்து அவங்க வயசு இருக்கு. சுள்ளாய்ங்க எல்லாம் 6, கொஞ்சம் வயசு அதிமாக ஆக அப்டியே 7, 8, 9 ன்னு தூரம் போவாய்ங்க. லேடீஸ் எல்லாம் ராத்திரிலயும், கருக்கல்லயும் இருட்டுக்குள்ளயே போய்ட்டு வந்துருவாக. லீவன்னைக்கெல்லாம் காலையில தண்டவாளத்துக்கு போய்ட்டு அப்டியே அந்த வழியாவே மலைக்கு போய் பக்கத்துல கம்மாயில குளிச்சுட்டு, மலை மேல போய் உக்காந்து வெளாடுறது தான் வழக்கமான பொழுதுபோக்கு அவனுக்கு.

சிலவேள தூக்குவாளி நெறைய புளிச்சோறு கட்டி, தொட்டுக்க பெரண்ட தொவய அரச்சு, 10 மாம்பழத்தயும் எடுத்துப் போட்டுக்கிட்டு, கொஞ்சம் மாங்கா கீத்து மொளகாப்பொடி போட்டு டிப்பன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு, வாட்டர்கேன்ல தண்ணியும் புடிச்சுக்கிட்டு வீட்டோட கிளம்பி பிக்னிக் போயிருவாக மலைக்கு. காலையில கிளம்பி போனா பொழுதடைய தான் வருவாக வீட்டுக்கு. அப்புறம் அடிக்கடி அவங்க அம்மா கூட மொத்தமா சேந்த துணி தொவைக்க பொட்டலம் கட்டிக்கிட்டு கோர வாய்க்கா கிளம்பிருவாக அவன், அவன் தம்பி, அண்ணன், மாமன், மச்சினன், சினேகிதங்க எல்லாம். ஒரு பக்கம் அவங்க அம்மா தொவைக்க மறுபக்கம் அவிய்ங்க எல்லாம் தண்ணிக்குள்ள குதியாட்டம் போட்டு திரிவாய்ங்க.  


இப்ப இருக்கிற பிள்ளைக மாதிரி வீட்டுக்குள்ளயே ஒத்தையில செல்போனுல கேம் விளையாடுற மாதிரி இல்ல அப்ப. அவஞ்சோட்டு பயலுவல்லாம் ஒண்ணா தான் திரியுவாக, வெளாடுவாக. எப்பயும் பத்து பதினஞ்சு பேரு கிட்டி, சில்லாக்கு, கோலிகுண்டு, பிள்ளபந்து, எறிபந்து, கள்ளன் போலிசு, பம்பரக்கட்டை, பரமபதம், தாயம், கம்புதள்ளி, கிரிக்கட்டுன்னு எதாச்சும் வெளாண்டுட்டே தான் இருப்பாக. அப்பறம் எல்லாரும் சேந்து கோர வாய்க்கா இல்லேனா கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டருன்னு எங்க தண்ணி வருதோ அங்க குளிச்சு குதியாட்டம் போட கிளம்பிருவாக. கம்மாயில தண்ணி வந்தா போதும் வேற வெளாட்டே வேணாம். பொழுதுக்கும் எருமையாட்டம் கம்மாத் தண்ணியிலயே ஊறிக் கெடப்பாய்ங்க. கம்மாயில இக்கரைக்கும் அக்கரைக்கும் போட்டி வச்சு நீந்தி ஜெயிக்கிறது தான் வெளாட்டு. ஒருவாட்டி கூட ஜெயிச்சதே இல்ல அவன். ஆனா எல்லா தடவையுமே போட்டில கலந்துகுவான். குளிக்கிறது மட்டுமில்ல மடையில உக்காந்து தூண்டிபோட்டு மீன் பிடிச்சு வீட்டுக்கு கொண்டுபோறது, அய்யனார் கோவில்ல பொங்க வாங்கி திங்கிறது, வீட்டுக்கு போற வழில தண்டவாளத்துக்கு ரெண்டு பக்கமும் மொளச்சு கெடக்குற பெரண்டை பறிச்சுட்டு போய் ஊறுகா போட குடுக்குறது எல்லாமே லீவுல நெதம் நடக்குற சங்கதி.  


கம்மாயில கரையில முங்கி முங்கு நீச்சல்லயே போய் முட்டி எந்திரிக்கிற குத்துக்கல்லு 12-ம் நூற்றாண்ட சேந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுன்னு பசுமை நடையில சாந்தலிங்கம் ஐயா விளக்கி சொல்ற வர தெரியாது அவனுக்கு. அந்த கல்லு மேல நின்னு தலைகீழா டைவு அடிச்சு குளிச்சிருக்கானே தவர அந்தக் கல்லுல அருவா, சாமரம், குடை, கலப்பைனு செதுக்கிருந்ததையும், “இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்” ன்னு வெட்டிருந்ததையும் இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கூட கவனிச்சதே இல்ல அவன். அவஞ்சோட்டு பயலுவலும் அப்படித்தான்.


அவனுக்கு தெரிஞ்சதெல்லாம், மாடக்குளம் ரொம்ப பெரிய கம்மா. அது ரொம்ப பழைய காலத்து கம்மா. கம்மா ஒடஞ்சா மதுரை அழிஞ்சு போவும். அது ஒடயாம இருக்க கம்மா கரையில ஈடாடி அய்யனார் காவ இருக்காரு. அவரு காவ இருக்கதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. அது என்னெனா, முன்னாடி ஒருநா இப்டித்தான் கம்மா பெருகி மடை ஒடயப்போற சமயத்துல அத பாத்த ஊருக்காரன் ஒருத்தன் கரையில இருக்கிற அய்யனாருகிட்ட எப்படியாவது கம்மா ஒடயாம ஊரக் காப்பாத்திடு. அதுக்கு ஈடா என் தலைய வெட்டி உனக்கு காணிக்கை குடுக்குறேன்னு மடயில கொண்டு போய் தலைய வச்சு தானே சிரச் சேதம் பண்ணிக்கிட்டானாம். அன்னையில இருந்து கம்மா ஒடயாம ஈடாடி அய்யனாரு ஓடோடி காவ காக்குறாராம். அதுக்கு மலை மேல இருக்கிற கொவ்வாலியும் (கபாலீஸ்வரிய கபாலின்னு கூப்பிட்டு பின்னாடி பேச்சு வாக்குல அது கொவ்வாலி ஆயிடுச்சு) தொணையிருக்குதாம். இது அவுக அய்யா அவனுக்கு சொன்ன கத. ஆனா அந்த மடைக்குப் பேரு “திருவாலவாயன் மடை” ங்கிறதும், அது மீனாட்சி சொக்கர குறிக்கிறதுங்கிறதும் பசுமைநடைக்கு போனப்போ தான் தெரிஞ்சுச்சு அவனுக்கு.


எடையில காவல்கோட்டம் நாவல் படிக்கையில அதுலயும் மதுரையோட எல்லையா மாடக்குளம் இருந்துச்சுன்னும், இதே மாதிரி மடைய மையமா வச்சு ஒரு தலைவெட்டி கதை வந்ததும், மாடக்குளத்துல மட்டும் கள்ளய்ங்களால கருது கசக்கிட்டு போக முடியலங்கிற சேதியும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


அவங்க ஊரும், அவன் வெளாண்ட எடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு காலத்துல மதுரையே மாடக்குளத்த அடிப்படையா வச்சுத் தான் வளந்திருக்குன்னு பசுமைநடையில எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அப்டியே பெருமையில பூரிப்பா இருந்துச்சு அவனுக்கு. அதுக்குச் சான்றா அவரு,  பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுல “மதுரோதய வளநாட்டில் மாடக்குளக்கீழ் மதுரை” ன்னு இருக்குறதயும், “மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம்”, “மாடக்குளக்கீழ் அரியூர்”, “மாடக்குளக்கீழ் கொடிமங்கலம்”, “மாடக்குளக்கீழ் குலசேகரபுரம்” ன்னு மாடக்குளத்த மையமா வச்சுத்தான் பல ஊருக இருந்திருக்கு. அதுக்கும் மேல இங்க பன்னண்டாம் நூற்றாண்டுல பாண்டியர் கால அரண்மனை இருந்துச்சுன்னும் போனதடவ இங்க வந்தப்ப சாந்தலிங்கம் அய்யா சொன்னத நெனவுபடுத்தி பேசப் பேச 541 படி ஏறிப்போன மலையையும் தாண்டி ஒசக்க ஆகாசத்துல மெதக்குற உணர்வு வந்துச்சு அவனுக்கு. 


அவுக அய்யா சொன்னதோட சிறுவயசுல இருந்து இவன் கவனிச்சிட்டு வர்ற இன்னொரு முக்கியமான சமாச்சாரம் இன்னும் இவுக ஊரு தான் பல பழமையான விசயங்கள இன்னும் பாதுகாத்துக்கிட்டு வருது. எம்.ஜி.ஆருக்கு சண்ட சொல்லிக்கொடுத்தது மாடக்குளத்து ஆளுக தான். இன்னுமும் இங்க சிலம்பாட்டம், சுண்ணாம்பு காளவாச எல்லாம் இருக்கு. குஸ்தி பள்ளிகொடம் இருக்கு. கார்ப்பரேசன் ஆனாலும் இன்னும் ஊர் கட்டுப்பாடு இருக்கு. தண்டோரா போட்டுத் தான் போவாக. கோயில்மாடு இருக்கு. ஊரு பூராவும் சல்லிக்கட்டு மாடு இருக்கு. இன்னும் வெளிய தெரியாம அய்யனார் கோயில்ல கெடா முட்டு நடக்கும், சேவச்சண்ட நடக்கும். மஞ்சத்தண்ணி இருக்கும். பத்து வருசத்துக்கு முன்னாடி கூட பழங்காநத்தத்துல சல்லிக்கட்டு நடந்ததும் அதுல சாரம் போட்டு இவன் வேடிக்கை பாத்ததும், மாடு அணையப் போன இவுக மாமா கால்ல லேசா குத்துப்பட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இதெல்லாம் இப்போ இங்க வந்தவக ஆச்சர்யமா பேச பேச இவனுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு.


அவங்க ஊருப் பெருமய மதுரை மட்டுமில்லாம, சென்னை, கடலூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, கும்பகோணம், திருச்சின்னு தமிழ் நாடு மட்டுமில்லாம ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியான்னு உலகம் பூராம் இருந்து பல நூத்துக்கணக்கான பேரு வந்து பாத்து வியந்து போனத நெனைக்க நெனைக்க சிலுத்துகிச்சு அவனுக்கு. பசுமைநடை தான் அவனுக்கு அவங்க ஊர்ப் பெருமய புரியவச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு மதுரய குறுக்குவெட்டா காமிச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு ஒரு சின்ன வட்டத்தத் தாண்டி எல்லைகள கடந்து பல மனுசங்கள அறிமுகப்படுத்துச்சு. அது அவன மாதிரி இன்னும் பல பேருக்கும் எல்லாமுமா இருந்துக்கிட்டுருக்கு. அதோட இயல்பு அப்படித்தான். பசுமைநடை ஆத்துல ஓடுற தண்ணி மாதிரி. சில பேரு அள்ளி குடிப்பாங்க, சில பேரு முங்கி குளிப்பாங்க. சில பேரு கால் மட்டும் நனைப்பாங்க. சில பேரு வேடிக்கை மட்டும் பாப்பாங்க. ஆனா ஆறு எல்லோருக்கும் ஒண்ணு தான்.


எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவன் சின்ன வயசுல பாத்த கம்மாயும், மடையும், மலையுமா இல்ல இப்போ இருக்கது. அவன் வீட்டுல இருந்து தண்டவாளத்து வழி நேரா பாத்தா மலையும், கம்மா கரையும் தெரியும் அவனுக்கு. இப்போ வயக்காடெல்லாம் கட்டடமாகிப் போச்சு. கம்மா கூட கொஞ்சம் சுருங்கிப் போச்சு. கோர வாய்க்கா வயக்காட்டு வரப்பளவு சிறுத்துப் போச்சு. கரும்பு மோட்டரு கார் செட்டாவும், தொட்டி மோட்டரு ரெண்டுமாடி வீடாவும், மாங்கா மோட்டரு அபார்ட்மெண்ட்டாவும் மாறிப்போச்சு. தண்டவாளம் கூட பிராட் கேஜா மாத்துறோம்னு சில வருசத்துக்கு முன்னாடி பேத்து எடுத்து பொதர் மண்டிப்போச்சு. நாம காப்பாத்த வேண்டியதெல்லாம் தொலச்சுட்டு இருக்கோம்னு புரியும் போது ஊருல மிச்சமிருக்கிற வயக்காட்டுலயாவது வெவசாயம் பண்ணனும்னு தோனுச்சு அவனுக்கு. மாடக்குளத்துக்கு குடும்பத்தோட பசுமைநடை போய்ட்டு வந்ததுல இருந்து அவங்க அய்யாவும், அவன் பால்யமும் நெனப்புலேயே இருக்கு அவனுக்கு...


---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண் பாஸ், ஆனந்த், விஷ்ணு வர்த்தன், அரவிந்தன்...

முந்தைய பாகங்களைப் படிக்க...



3 comments:

  1. மாடக்குளம் குறித்து எல்லோரும் எழுதலாம். ஆனால், அந்தக் கண்மாயில் குளித்து அந்த மலையில் ஏறி மதுரை பார்த்த கண்களால் பதிவு கதையாய் விரியும் போது இன்னும் இன்னும் அழகு கூடி விடுகிறது பழைய சோற்றை வெங்காயம் வைத்து வயக்காட்டில் வைத்து சாப்பிடுவது போல. அருமையான பதிவு உதயா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்திரவீதிக்காரரே... யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பவர்களால் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்க இயலும்... மரபார்ந்த விசயங்களை அந்தந்த மண்ணுக்குரியவர்களாலேயே உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தவோ, உணர்வுப்பூர்வமாய் வெளிப்படுத்தவோ இயலும்... சென்னை என்பது பெயர் மெட்ராஸ் என்பது உணர்வு என்பது போல, மதுரை என்பதும் பெயர் அல்ல அது உயிர்... அதனை அதே உயிரோட்டத்துடன் மதுரைக்காரர்களாலேயே பதிவு செய்ய இயலும்...

      Delete
  2. ஏஞ்சாமி ஒமக்குள்ள உம்ம ஊர பத்தி இம்புட்டு வெசயம் கெடக்கா.. அடியாத்தி.. நல்லாருக்கப்பூ!!

    ReplyDelete