Thursday 9 January 2014

யானைமலையில் பசுமைநடை (29)...


என்ன மாப்ள 2-3 நாளா உன் போன் ரீச் ஆகல?

ஆமா மாப்ள, புனே போயிருந்தேன்டா அதான் சுவிட்ச் ஆப் பண்ணிருந்தேன், ஏன்டா?

வேற ஒண்ணுமில்லை, போன ஞாயித்துக்கிழமை உங்க ஏரியாவுக்கு வந்திருந்தோம் அதான்.

வந்திருந்தோமா? யார்யாரெல்லாம்? எதுவும் முக்கியமான விசயமா?

இல்ல மாப்ள, சும்மா தான் கிரீன் வாக்ல இருந்து யானைமலைக்கு வந்திருந்தோம். சரி நீ வீட்ல இருந்தா உன்னையும் வர சொல்லலாம்னு தான்.


கிரீன் வாக்னா இந்த மலை மலையா போவிங்களே அதான? இந்த வாட்டி யானைமலையாக்கும்? உங்களுக்கு யானைமலையைப் தெரியுமா?

எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும். உனக்கு முழுசா தெரியுமா?

ஏன் தெரியாம? எங்களுக்கு இந்த மலையே சாமிடா. இங்க நரசிங்கப்பெருமாளுக்கு குடைவரை கோயில் இருக்கு. ரொம்ப பழமையான கோயில்.


வேற என்ன தெரியும்?

வேற என்ன இருக்கு?

இந்த மலையில சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? லாடன் கோயில் இருக்கு தெரியுமா?


ஆமா, மலை மேல கொஞ்ச தூரத்துல கல்வெட்டுலாம் இருக்கு. ஏதோ பஞ்ச பாண்டவர், முனிவர்லாம் இருந்த இடம்னு சொல்லுவாங்க. அதென்ன சமணர் படுக்கை? லாடன் கோயில்?

அது என்னன்னு சொல்றேன். கல்வெட்டுலாம் இருக்குனு சொன்னியே அதுல என்ன எழுதிருக்குனு தெரியுமா?

கல்வெட்டு இருக்குனு தான் தெரியும். அதுல என்ன இருக்குனு தெரியாது.

ஆனா எனக்கு தெரியும். இந்த மலையைப் பத்தி உனக்கு தெரியாததெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு மட்டுமில்ல, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், விருது நகர், ராமநாதபுரம், வத்ராப் அப்புறம் மதுரைக்குள்ளயே  அங்க இங்கனு  கிட்டத்தட்ட இப்போ 250  பேருக்கும் அதிகமானவங்களுக்கு தெரியும்.


என்னடா சொல்ற? எங்க ஊரைப்பத்தி எனக்கே தெரியாததெல்லாம் எங்கெங்கயோ இருந்து வந்து தெரிஞ்சுட்டு போயிருக்காங்க. நீ சொல்லும்போது எனக்கே வெக்கமா இருக்கு மாப்ள. தயவுசெஞ்சு கொஞ்சம் அதபத்தி சொல்லுடா, நானும் தெரிஞ்சுக்குறேன்...

ஹா ஹா. சொல்றேன் மாப்ள. உங்க ஊரு பேரு மொதல்ல, அதாவது 9-10 நூற்றாண்டுல நரசிங்கமங்கலம், இப்போ தான் அது நரசிங்கம்னு சுருங்கிடுச்சு. நான் சொல்லல, கல்வெட்டு சொல்லுது. இந்த மலையோட உயரம் 90 மீட்டர், அகலம் 1200 மீட்டர்,  நீளம் 4000 மீட்டர்.  



நாம நிக்கிறதுக்கு நேரா தும்பிக்கை மாதிரி தெரியுது பாரு அங்க ஒரு இடத்துல இயற்கையாவே சின்ன குகை மாதிரி இருக்கும். அங்க கொஞ்சம் சமணர் படுக்கைகளும், ஒரு தமிழ் பிராமி கல்வெட்டும் இருக்கு. சமணர் படுக்கைனா என்னன்னா, மதுரையை சுத்தி இருக்கிற அதிகமா ஆள் நடமாட்டமில்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற மலைகள்ல யார் தொந்தரவும் இல்லாம இருக்கனும்ங்கறதுக்காக சமணத் துறவிங்க வந்து தங்கினாங்க. அவங்க தங்குறதுக்கு வசதியா கல்லுலயே படுக்கை மாதிரி வெட்டி குடுப்பாங்க, அதான்.



யானைமலையில அந்த இடத்துக்கு போறதுக்கு நரசிங்கம் மெயின் ரோட்ல போலீஸ் ஸ்டேஷன் தாண்டுனதும் வலது பக்கம் ஒரு சந்து மாதிரி போகுதுல, உனக்கு தான் தெரியுமே அந்த வழியாத் தான் போகணும். 



ஆனா மேல கொஞ்சம் சிரமப்பட்டு தான் மாப்ள ஏறனும். கொங்சதூரம் படி இருக்கு, அப்புறம் ஒரு இடத்துல இரும்புட்ட படி போட்ருக்காங்க. அதத் தாண்டி போனா தான் நான் சொல்ற படுக்கைகளும், கல்வெட்டும் வரும்.



அந்த கல்வெட்டுல என்ன போட்ருக்குனா,
“இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
அப்டின்னு போட்ருக்கு. இதுல இவம் அப்டினா சமஸ்கிருதத்துலயும், பிராகிருதத்துலயும் யானைன்னு அர்த்தம். அதாவது 2000 வருசத்துக்கு முன்னாடியே இதுக்கு யானைமலைன்னு பேர் இருந்திருக்கு. உறையுள் அப்டினா தங்குமிடம், பாதந்தான் அப்டினா பாய் அல்லது படுக்கை. அதையே பதந்தன்ன்னு வாசிச்சா மரியாதைக்குரியவர்னு அர்த்தம். அட்டவாயி/அத்துவாயின்னா சொற்பொழிவாளர்ன்னு அர்த்தம். காயிபனை காஸ்யபன்ற கோத்திர பேராகவும் அர்த்தப்படுத்திக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா ஏரி அரிதன் மற்றும் அத்துவாயி அரட்டகாயிபன்ங்கிற ரெண்டு சமணத்துறவிகளுக்காக யானைமலையில வெட்டிக்குடுத்த படுக்கை அப்டின்னு அர்த்தம்.


மாப்ள, இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? இத்தனை நாள் எனக்கு தெரியாமப் போச்சே மாப்ள. சரி மலைமேல ஒரு யானைக்கண்ணீர் ஊற்று இருக்கே? போனிங்களா?


அது தெரியும் மாப்ள. ஆனா இந்த தடவ போகல. இன்னொரு நாளைக்கு மலைக்கு மேல நடக்கனும்னு சொல்லிருக்காங்க. அன்னைக்கு போவோம்.
மாப்ள, அப்புறம் நரசிங்கம் கோயிலுக்கு போற வழியில நிறைய சமண சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் இருக்கு. அதையெல்லாம் இந்த தடவ பாக்கல. ஏற்கனவே அங்க போய்ட்டு வந்துட்டோம். ஆனாலும், புதுசா வந்தவங்களுக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தோட ஹிஸ்டரி ப்ரொபசர் கண்ணன் சார் கொஞ்சம் சொன்னாரு.



நரசிங்கபெருமாள் கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி வலது பக்கம் திரும்பி போனா 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், அப்புறம் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி சிலைகள் இருக்கு. அதுக்கு மேலயெல்லாம் சுண்ணாம்பு பூசி அழகழகா கலர்ல ஓவியம் வரைஞ்சிருக்காங்க. அது சித்தன்ன வாசல் ஓவியம் வரைஞ்ச காலகட்டத்தை சேர்ந்ததுன்னு சொன்னாரு. யோகநரசிம்மர் கோயிலும், லாடன் கோயிலும் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாம்.



பாத்தியா உங்க ஊரு மலை எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு. இப்பிடிப்பட்ட மலையைத் தான் சிற்ப நகரா மாத்தணும்னு முயற்சி பண்ணாங்க. அப்போ ஆரம்பிச்சது தான் பசுமை நடை. அதுனால இந்த மலை பசுமைநடையோட வரலாற்றுலயும் இடம் பிடிச்சுருச்சு.


அப்டியா மாப்ள. நான் கூட எங்க மலைய உடைக்கக்கூடாதுன்னு பயலுகளோட சேந்து ரோட்ட மரிச்சேன் மாப்ள. சரி மாப்ள, யாரு வேணாலும் பசுமை நடைக்கு வரலாமா? எப்போலாம் போவிங்க? சேரணும்னா என்ன பண்ணனும்?


யாரு வேணாலும் சேரலாம் மாப்ள. ஒவ்வொரு மாசமும் ஏதாவதொரு ஞயிற்றுக்கிழமை அன்னைக்கு காலைல வெள்ளன 6 மணிக்கெல்லாம் போய்ட்டு 9-10 மணிவாக்குல முடிச்சு திரும்பிடுவோம். இத SMS / Face Book மூலமா தான் ஒருங்கிணைக்கிறோம். இதுல சேரணும்னா 97897 30105 ன்ற நம்பரை தொடர்பு கொண்டா போதும். Face Book ல போய் Green Walk ன்ற பேஜ் பாரு மாப்ள.

அ.முத்துக்கிருஷ்ணன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார்ல?


ஆமா, இந்த விஜய் டிவில எல்லாம் வருவாரே, நீயா நானவுல?

அவரே தான். அவரு தான் இத மொத மொதல்ல ஆரம்பிச்சாரு. அப்புறம் அவரோட நண்பர்கள், பொது மக்கள்னு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 800 பேர் வரை பசுமைநடையில உறுப்பினர் ஆகிருக்காங்க மாப்ள. இந்த தடவ கூட 250 பேர் வந்துட்டாங்க. அதான் ஏற்கனவே சொன்னேன்ல?


யே யாத்தே! அம்புட்டு பெரும் காலங்காத்தால எந்திரிச்சு வந்துர்றாங்களா மாப்ள? அதுவும் வெளியூர்கள்ல இருந்தெல்லாம் வர்றாங்கன்னு வேற சொல்ற?

அதெல்லாம் ஒவ்வொரு தடவையும் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது மாப்ள. இதுல அவ்வளவு பேருக்கும் காலை சாப்பாடு வேற தர்றோம் மாப்ள. அதுவும் கட்டணமில்லாம. ஆனா யாராவது தானா முன்வந்து ஏதாவது குடுத்தா வாங்கிக்குவோம்.

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் மாப்ள. பசுமைநடைக்கு கும்பகோணத்துல இருந்து முருகராஜ்னு ஒரு நண்பர் வர்றாரு. அவரும் அவரு நண்பர்களும் சேந்து சஞ்சிகைனு ஒரு சின்ன பத்திரிகை நடத்துறாங்க. அதுல பசுமைநடையைப் பத்தி தொடர்ச்சியா பதிவுபண்றாங்க. நான் கூட கட்டுரை எழுதிருக்கேன். இந்த மாசத்தோட சஞ்சிகை இதழ அங்கன மலை மேலேயே வச்சு வெளியிட்டாப்ள. வந்தவங்களுக்கும் அதுல ஒரு சந்தோசம்.


பரவாயில்லையே மாப்ள. யானைமலை சிற்பநகரா மாத்துனப்ப ஆரம்பிச்சதுன்னு சொல்ற? அப்டினா கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கு மேல ஆச்சே. இவ்ளோ நாளு இத கட்டணமில்லாம நடத்துறதே பெரிய விஷயம் தான் மாப்ள. உண்மையிலேயே எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டணும். எனக்கும் இப்போ ஆர்வமாயிடுச்சு மாப்ள. அடுத்த மாசத்துல இருந்து நானும் வர்றேன். அதுக்கு முன்னாடி யானைமலையை பயலுகளோட ஒரு வாட்டி சுத்திப்பாக்கப் போறேன். நிறைய விசையம் சொல்லிருக்க. ரொம்ப நன்றி மாப்ள.

சரி மாப்ள. நீ பாத்துட்டு வா. நாம அடுத்த நடையில அதப்பத்தி பேசலாம். அடுத்த நடை மேலக்குயில்குடிக்கு போறோம், ஜனவரி 26 ம் தேதி. அங்க சந்திப்போம். பாய்.


- உதயக்குமார் பாலகிருஷ்ணன்... 

ஒளிப்படங்கள்:

அருண் பாஸ், எப் ஜெய், மதுமலரன், ஷாஜகான், சுந்தர், P.G.சரவணன்...

2 comments:

  1. Excellent Message .............. Very Superb Snaps........... Write Ups Motivational ...... Keep it up Udayakumaar sir.......

    ReplyDelete