Showing posts with label Green Walk. Show all posts
Showing posts with label Green Walk. Show all posts

Thursday, 14 January 2016

பசுமைநடை நாட்காட்டி – 2016...

காலம் - அது ஒரு மந்திரச்சொல்... அதன் பயணத்தில் நம் வாழ்வும் இயல்பும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கடந்துவிட்ட காலத்தை மீட்டெடுப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொருவருக்குள்ளும் இந்த கால மாற்றத்தின் நினைவுகள் உறைந்திருக்கின்றன. நினைவுகளின் வழியே அவை உயிர்ப்போடு இருக்கின்றன.

ஆங்கிலத்தில் John Keats எழுதிய Ode on A Grecian Urn வாசித்திருக்கிறீர்களா? அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இறந்தவர்களின் சாம்பல் போட்டுவைக்கும் தாழியை (குவளை) வர்ணித்து எழுதப்பட்ட கலிப்பாடல் மாதிரியான ஒரு கிரேக்க கவிதை. அந்த கவிதை முழுவதிலும் அந்த தாழியில் வரையப்பட்டிருக்கும்/செதுக்கப்பப்பட்டிருக்கும் காட்சிகள், அதன் தருணங்கள், அதன் உயிர்ப்புத்தன்மை மிகுந்த ரசனையோடு புனையப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பதைப் போல ஒரு காட்சி செதுக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் இயல்பை, அந்த தருணத்தின் உயிர்ப்பை கவிஞர் இப்படி வர்ணித்திருப்பார்.
Heard melodies are sweet, but those unheard are sweeter”. நாம் ஒருவர் வாசிக்கும் இசையை கேட்டுவிட்டால் அது அந்த நேரத்திற்கான ரசனை மட்டுமே. ஆனால் இங்கு இவன் வாசிக்கும் இசை என்னவாயிருக்கும், அது எந்த மாதிரியான உணர்வை நமக்குள் கடத்தும் என்பது நம் சிந்தனையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் அந்த இசை நமக்குள் ஒரு ரசனையை கடத்திக்கொண்டேயிருக்கிறது. அந்த காட்சி நமக்கு மீண்டும் மீண்டும் அந்த உணர்வை கொண்டு வந்து சேர்க்கிறது. இது தான் காட்சிப் படிமமாக்கப்பட்ட உணர்வுகளின், தருணங்களின் இரசவாதம்.
காலத்தை, அதன் இயல்புகளை, அது தந்த நினைவுகளை, காட்சிப்படிமங்களாக, ரசனை மிகுந்ததாக உறைபனியாய் உறையச்செய்யும் லாவகம் ஓவியத்திற்கு, சிற்பத்திற்கு, புகைப்படத்திற்கு, எழுத்திற்கு உண்டு. நவீன யுகத்தில் புகைப்படங்களின் வீச்சு அலாதியானது. அதன் எளிமையும், தொழில்நுட்பமும் அதனை சாத்தியப்படுத்துகிறது. செல்போன்களில் கேமரா வந்த பிறகு காணும் யாவையும் கைக்குள் வசப்படுத்தி பத்திரப்படுத்த முடிகிறது. புகைப்படக்கலைஞர்களின் நேர்த்தியைப் பொறுத்து அதன் நுணுக்கங்களும், ரசனையும் மட்டுமே மாறுபடுகிறது. மற்றபடி நினைவுகளின் உயிர்ப்புத்தன்மை காட்சிப்படிமமாக மீட்டெடுக்கப்படுகிறது.
நினைவுகளின் பேராற்றல் அந்த தருணங்களை (Moments) அப்படியே காட்சிபடிமமாக, ரசனை மிகுந்ததாக, அதே உயிர்ப்புடன் மீட்டுத்தருவதில் அடங்கியிருக்கிறது. அதனால் தான் நாம் மனிதர்களை, அந்த தருணங்களை நினைவில் கொள்ள வழங்கும் பரிசுப்பொருட்களுக்கு நினைவுப் பரிசு (Memento) என பெயரிட்டிருக்கிறோம்.


எல்லாப் பரிசுகளுமே நினைவுப்பரிசுகளாக ஆகிவிட முடியாது. நாம் வழங்கும் பரிசும், அந்த பரிசை தெரிவு செய்வதற்கான அல்லது தயார் செய்வதற்கான மெனக்கெடல்கள், அதனை வழங்கும் முறை, தருணம் என எல்லாமுமே பரிசைப்பெறுபவர் அந்த தருணத்திலும், அந்த பரிசு மீட்டெடுக்கும் தருணத்திலும் மகிழ்ந்து லயித்துக் கிடக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
சிலருக்கு நாம் பரிசு வழங்குவது மட்டுமே முக்கியம். சிலருக்கு நாம் என்ன பரிசு வழங்குகிறோம் என்பதும் முக்கியம். நாம் எதிர்பாராதவொரு தருணத்தில் நமக்கு கிடைக்கும் பரிசுகள் நம்மை மகிழ்ச்சியில் மட்டுமல்லாது ஆச்சர்யத்திலும் திளைக்கச் செய்கின்றன. 
நினைவுகளை மீட்டெடுக்க பரிசுகளும், அந்த பரிசுகளே பல நினைவுகளை தருவதும் இனிய முரண். பரிசளிப்பதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை அல்லது அந்த தருணத்தை, ஒரு நிகழ்வை நினைவுறுத்த வழங்கப்படுவது. மற்றொன்று நல்ல நினைவுகளையே பரிசளிப்பது. நம் எல்லோருக்குமே மறக்ககூடாத நினைவுகள் சில இருக்கும். எப்பாடுபட்டாவது மறந்துவிட வேண்டும் அல்லது நம் நினைவிற்கே வரக்கூடாது என்பது போன்ற நினைவுகளும் சிலருக்கு இருக்கலாம். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை", "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா" வகையறா பாடல்கள் எல்லாம் இந்த வகை தான். ஆனால் நல்ல நினைவுகளை மீட்டெடுப்பதென்பது நம்மை தொடர்ந்து உயிர்ப்போடு இயங்கச் செய்யும்.



கடந்த 10/01/2016 ஞாயிறன்று மாடக்குளம் சென்ற பசுமைநடையும் ஒரு வகையில் என் பால்யத்தை, என் குழந்தைமையை, நான் களித்துணர்ந்த மகிழ்வான தருணங்களை மீண்டும் எனக்கு நினைவூட்டியது. அதன் தொடர்ச்சியாக பசுமைநடை நிகழ்த்திய இம்மாதிரியான இரசவாத தருணங்களை இந்த ஆண்டு முழுவதிலும் நினைத்து கொண்டேயிருக்க, அதனை தொடர்ந்து ஞாபகப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது பசுமைநடை நாட்காட்டி. 


பசுமைநடையின் பொன்னான சாதனைத் தருணங்களை, அதன் உயிர்ப்பான உணர்வுகளை ஆண்டு முழுவதிலும் அசைபோடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாட்காட்டி. நினைவுகளின் வழியே மகிழ்வான தருணங்களை மீட்டெடுக்க அதில் அச்சிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நமக்கு சிறந்த நினைவூட்டிகளாக இருக்கின்றன. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் பசுமைநடையினர் அனைவருக்கும் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இந்த பசுமைநடை நாட்காட்டி. நல்ல தருணங்களை நமக்கு வழங்கியதோடு அதன் நினைவுகளையும் தொடர்ந்து பரிசளிக்கும் பசுமைநடைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண்பாஸ், விஷ்ணு வர்த்தன்...

Sunday, 10 January 2016

நெனப்பு வந்துச்சு அவனுக்கு : பாகம் – 3 (GW 54 – மாடக்குளம்)...


பசுமைநடையில இருந்து இந்த தடவ 54-வது நடையா மாடக்குளம் போறதா sms வந்ததும், 30 வயசு மனசு தடதடன்னு 20-25 வருஷம் பின்னாடி போய் தண்டவாளம் வழியா நடந்து கொவ்வாலி மலைக்குப் போனது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


கொவ்வாலிமலை, மாடக்குளம் கம்மா, கோர வாய்கா, 12-ம் பாலம், செம்மண் பிச்சு, கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டரு, அம்மாசிக் கிணருன்னு சின்ன வயசுல விழுந்து, கிடந்து, விளையாண்டு, குளிச்சு, சுத்தினு எல்லாம் நெனப்பு வர மனசெல்லாம் பூத்துக் கெடந்தது அவனுக்கு.


வீட்ட ஒட்டினாப்ல இருக்கிற, மதுரையில இருந்து போடிக்கு போற தமிழ்நாட்டோட கடைசி மீட்டர் கேஜ் ரயிலு தண்டவாளம் தான் அவங்க ஏரியாவுக்கே கக்கூசு. அதுல அவன் வீட்டுக்கிட்ட இருக்கிறது ஆறாம் பாலம். கொவ்வாலி மலை பன்னெண்டாம் பாலம் தாண்டியிருக்கு. வெளிக்கி இருக்கிறதுக்கு எத்தனாம் பாலம் தூரம் போறோங்கறத பொறுத்து அவங்க வயசு இருக்கு. சுள்ளாய்ங்க எல்லாம் 6, கொஞ்சம் வயசு அதிமாக ஆக அப்டியே 7, 8, 9 ன்னு தூரம் போவாய்ங்க. லேடீஸ் எல்லாம் ராத்திரிலயும், கருக்கல்லயும் இருட்டுக்குள்ளயே போய்ட்டு வந்துருவாக. லீவன்னைக்கெல்லாம் காலையில தண்டவாளத்துக்கு போய்ட்டு அப்டியே அந்த வழியாவே மலைக்கு போய் பக்கத்துல கம்மாயில குளிச்சுட்டு, மலை மேல போய் உக்காந்து வெளாடுறது தான் வழக்கமான பொழுதுபோக்கு அவனுக்கு.

சிலவேள தூக்குவாளி நெறைய புளிச்சோறு கட்டி, தொட்டுக்க பெரண்ட தொவய அரச்சு, 10 மாம்பழத்தயும் எடுத்துப் போட்டுக்கிட்டு, கொஞ்சம் மாங்கா கீத்து மொளகாப்பொடி போட்டு டிப்பன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு, வாட்டர்கேன்ல தண்ணியும் புடிச்சுக்கிட்டு வீட்டோட கிளம்பி பிக்னிக் போயிருவாக மலைக்கு. காலையில கிளம்பி போனா பொழுதடைய தான் வருவாக வீட்டுக்கு. அப்புறம் அடிக்கடி அவங்க அம்மா கூட மொத்தமா சேந்த துணி தொவைக்க பொட்டலம் கட்டிக்கிட்டு கோர வாய்க்கா கிளம்பிருவாக அவன், அவன் தம்பி, அண்ணன், மாமன், மச்சினன், சினேகிதங்க எல்லாம். ஒரு பக்கம் அவங்க அம்மா தொவைக்க மறுபக்கம் அவிய்ங்க எல்லாம் தண்ணிக்குள்ள குதியாட்டம் போட்டு திரிவாய்ங்க.  


இப்ப இருக்கிற பிள்ளைக மாதிரி வீட்டுக்குள்ளயே ஒத்தையில செல்போனுல கேம் விளையாடுற மாதிரி இல்ல அப்ப. அவஞ்சோட்டு பயலுவல்லாம் ஒண்ணா தான் திரியுவாக, வெளாடுவாக. எப்பயும் பத்து பதினஞ்சு பேரு கிட்டி, சில்லாக்கு, கோலிகுண்டு, பிள்ளபந்து, எறிபந்து, கள்ளன் போலிசு, பம்பரக்கட்டை, பரமபதம், தாயம், கம்புதள்ளி, கிரிக்கட்டுன்னு எதாச்சும் வெளாண்டுட்டே தான் இருப்பாக. அப்பறம் எல்லாரும் சேந்து கோர வாய்க்கா இல்லேனா கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டருன்னு எங்க தண்ணி வருதோ அங்க குளிச்சு குதியாட்டம் போட கிளம்பிருவாக. கம்மாயில தண்ணி வந்தா போதும் வேற வெளாட்டே வேணாம். பொழுதுக்கும் எருமையாட்டம் கம்மாத் தண்ணியிலயே ஊறிக் கெடப்பாய்ங்க. கம்மாயில இக்கரைக்கும் அக்கரைக்கும் போட்டி வச்சு நீந்தி ஜெயிக்கிறது தான் வெளாட்டு. ஒருவாட்டி கூட ஜெயிச்சதே இல்ல அவன். ஆனா எல்லா தடவையுமே போட்டில கலந்துகுவான். குளிக்கிறது மட்டுமில்ல மடையில உக்காந்து தூண்டிபோட்டு மீன் பிடிச்சு வீட்டுக்கு கொண்டுபோறது, அய்யனார் கோவில்ல பொங்க வாங்கி திங்கிறது, வீட்டுக்கு போற வழில தண்டவாளத்துக்கு ரெண்டு பக்கமும் மொளச்சு கெடக்குற பெரண்டை பறிச்சுட்டு போய் ஊறுகா போட குடுக்குறது எல்லாமே லீவுல நெதம் நடக்குற சங்கதி.  


கம்மாயில கரையில முங்கி முங்கு நீச்சல்லயே போய் முட்டி எந்திரிக்கிற குத்துக்கல்லு 12-ம் நூற்றாண்ட சேந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுன்னு பசுமை நடையில சாந்தலிங்கம் ஐயா விளக்கி சொல்ற வர தெரியாது அவனுக்கு. அந்த கல்லு மேல நின்னு தலைகீழா டைவு அடிச்சு குளிச்சிருக்கானே தவர அந்தக் கல்லுல அருவா, சாமரம், குடை, கலப்பைனு செதுக்கிருந்ததையும், “இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்” ன்னு வெட்டிருந்ததையும் இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கூட கவனிச்சதே இல்ல அவன். அவஞ்சோட்டு பயலுவலும் அப்படித்தான்.


அவனுக்கு தெரிஞ்சதெல்லாம், மாடக்குளம் ரொம்ப பெரிய கம்மா. அது ரொம்ப பழைய காலத்து கம்மா. கம்மா ஒடஞ்சா மதுரை அழிஞ்சு போவும். அது ஒடயாம இருக்க கம்மா கரையில ஈடாடி அய்யனார் காவ இருக்காரு. அவரு காவ இருக்கதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. அது என்னெனா, முன்னாடி ஒருநா இப்டித்தான் கம்மா பெருகி மடை ஒடயப்போற சமயத்துல அத பாத்த ஊருக்காரன் ஒருத்தன் கரையில இருக்கிற அய்யனாருகிட்ட எப்படியாவது கம்மா ஒடயாம ஊரக் காப்பாத்திடு. அதுக்கு ஈடா என் தலைய வெட்டி உனக்கு காணிக்கை குடுக்குறேன்னு மடயில கொண்டு போய் தலைய வச்சு தானே சிரச் சேதம் பண்ணிக்கிட்டானாம். அன்னையில இருந்து கம்மா ஒடயாம ஈடாடி அய்யனாரு ஓடோடி காவ காக்குறாராம். அதுக்கு மலை மேல இருக்கிற கொவ்வாலியும் (கபாலீஸ்வரிய கபாலின்னு கூப்பிட்டு பின்னாடி பேச்சு வாக்குல அது கொவ்வாலி ஆயிடுச்சு) தொணையிருக்குதாம். இது அவுக அய்யா அவனுக்கு சொன்ன கத. ஆனா அந்த மடைக்குப் பேரு “திருவாலவாயன் மடை” ங்கிறதும், அது மீனாட்சி சொக்கர குறிக்கிறதுங்கிறதும் பசுமைநடைக்கு போனப்போ தான் தெரிஞ்சுச்சு அவனுக்கு.


எடையில காவல்கோட்டம் நாவல் படிக்கையில அதுலயும் மதுரையோட எல்லையா மாடக்குளம் இருந்துச்சுன்னும், இதே மாதிரி மடைய மையமா வச்சு ஒரு தலைவெட்டி கதை வந்ததும், மாடக்குளத்துல மட்டும் கள்ளய்ங்களால கருது கசக்கிட்டு போக முடியலங்கிற சேதியும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


அவங்க ஊரும், அவன் வெளாண்ட எடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு காலத்துல மதுரையே மாடக்குளத்த அடிப்படையா வச்சுத் தான் வளந்திருக்குன்னு பசுமைநடையில எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அப்டியே பெருமையில பூரிப்பா இருந்துச்சு அவனுக்கு. அதுக்குச் சான்றா அவரு,  பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுல “மதுரோதய வளநாட்டில் மாடக்குளக்கீழ் மதுரை” ன்னு இருக்குறதயும், “மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம்”, “மாடக்குளக்கீழ் அரியூர்”, “மாடக்குளக்கீழ் கொடிமங்கலம்”, “மாடக்குளக்கீழ் குலசேகரபுரம்” ன்னு மாடக்குளத்த மையமா வச்சுத்தான் பல ஊருக இருந்திருக்கு. அதுக்கும் மேல இங்க பன்னண்டாம் நூற்றாண்டுல பாண்டியர் கால அரண்மனை இருந்துச்சுன்னும் போனதடவ இங்க வந்தப்ப சாந்தலிங்கம் அய்யா சொன்னத நெனவுபடுத்தி பேசப் பேச 541 படி ஏறிப்போன மலையையும் தாண்டி ஒசக்க ஆகாசத்துல மெதக்குற உணர்வு வந்துச்சு அவனுக்கு. 


அவுக அய்யா சொன்னதோட சிறுவயசுல இருந்து இவன் கவனிச்சிட்டு வர்ற இன்னொரு முக்கியமான சமாச்சாரம் இன்னும் இவுக ஊரு தான் பல பழமையான விசயங்கள இன்னும் பாதுகாத்துக்கிட்டு வருது. எம்.ஜி.ஆருக்கு சண்ட சொல்லிக்கொடுத்தது மாடக்குளத்து ஆளுக தான். இன்னுமும் இங்க சிலம்பாட்டம், சுண்ணாம்பு காளவாச எல்லாம் இருக்கு. குஸ்தி பள்ளிகொடம் இருக்கு. கார்ப்பரேசன் ஆனாலும் இன்னும் ஊர் கட்டுப்பாடு இருக்கு. தண்டோரா போட்டுத் தான் போவாக. கோயில்மாடு இருக்கு. ஊரு பூராவும் சல்லிக்கட்டு மாடு இருக்கு. இன்னும் வெளிய தெரியாம அய்யனார் கோயில்ல கெடா முட்டு நடக்கும், சேவச்சண்ட நடக்கும். மஞ்சத்தண்ணி இருக்கும். பத்து வருசத்துக்கு முன்னாடி கூட பழங்காநத்தத்துல சல்லிக்கட்டு நடந்ததும் அதுல சாரம் போட்டு இவன் வேடிக்கை பாத்ததும், மாடு அணையப் போன இவுக மாமா கால்ல லேசா குத்துப்பட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இதெல்லாம் இப்போ இங்க வந்தவக ஆச்சர்யமா பேச பேச இவனுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு.


அவங்க ஊருப் பெருமய மதுரை மட்டுமில்லாம, சென்னை, கடலூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, கும்பகோணம், திருச்சின்னு தமிழ் நாடு மட்டுமில்லாம ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியான்னு உலகம் பூராம் இருந்து பல நூத்துக்கணக்கான பேரு வந்து பாத்து வியந்து போனத நெனைக்க நெனைக்க சிலுத்துகிச்சு அவனுக்கு. பசுமைநடை தான் அவனுக்கு அவங்க ஊர்ப் பெருமய புரியவச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு மதுரய குறுக்குவெட்டா காமிச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு ஒரு சின்ன வட்டத்தத் தாண்டி எல்லைகள கடந்து பல மனுசங்கள அறிமுகப்படுத்துச்சு. அது அவன மாதிரி இன்னும் பல பேருக்கும் எல்லாமுமா இருந்துக்கிட்டுருக்கு. அதோட இயல்பு அப்படித்தான். பசுமைநடை ஆத்துல ஓடுற தண்ணி மாதிரி. சில பேரு அள்ளி குடிப்பாங்க, சில பேரு முங்கி குளிப்பாங்க. சில பேரு கால் மட்டும் நனைப்பாங்க. சில பேரு வேடிக்கை மட்டும் பாப்பாங்க. ஆனா ஆறு எல்லோருக்கும் ஒண்ணு தான்.


எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவன் சின்ன வயசுல பாத்த கம்மாயும், மடையும், மலையுமா இல்ல இப்போ இருக்கது. அவன் வீட்டுல இருந்து தண்டவாளத்து வழி நேரா பாத்தா மலையும், கம்மா கரையும் தெரியும் அவனுக்கு. இப்போ வயக்காடெல்லாம் கட்டடமாகிப் போச்சு. கம்மா கூட கொஞ்சம் சுருங்கிப் போச்சு. கோர வாய்க்கா வயக்காட்டு வரப்பளவு சிறுத்துப் போச்சு. கரும்பு மோட்டரு கார் செட்டாவும், தொட்டி மோட்டரு ரெண்டுமாடி வீடாவும், மாங்கா மோட்டரு அபார்ட்மெண்ட்டாவும் மாறிப்போச்சு. தண்டவாளம் கூட பிராட் கேஜா மாத்துறோம்னு சில வருசத்துக்கு முன்னாடி பேத்து எடுத்து பொதர் மண்டிப்போச்சு. நாம காப்பாத்த வேண்டியதெல்லாம் தொலச்சுட்டு இருக்கோம்னு புரியும் போது ஊருல மிச்சமிருக்கிற வயக்காட்டுலயாவது வெவசாயம் பண்ணனும்னு தோனுச்சு அவனுக்கு. மாடக்குளத்துக்கு குடும்பத்தோட பசுமைநடை போய்ட்டு வந்ததுல இருந்து அவங்க அய்யாவும், அவன் பால்யமும் நெனப்புலேயே இருக்கு அவனுக்கு...


---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண் பாஸ், ஆனந்த், விஷ்ணு வர்த்தன், அரவிந்தன்...

முந்தைய பாகங்களைப் படிக்க...



Sunday, 6 September 2015

கீழடி - மதுரையின் தாளடி... (GW - 51)

அடைமழை விட்டதும் செடிமழை என்பார்கள். ஆனால் இன்னும் அடைமழையே விட்டபாடில்லை. ஆம், கீழக்குயில்குடி ஆலமரத்தடி பெருவிழாவில் தொடங்கிய இன்னீர் மன்றல் உற்சாகம், புத்தகத் திருவிழாவில் நீட்சி பெற்று, கீழடியில் புதைந்து கிடக்கும் வைகை மண்ணின் வரலாற்றை கண்டபொழுது இரட்டிப்பாகியிருந்தது.


வைகை தவழ்ந்து வரும் பாண்டிய நாட்டுப் பெருவழியில் குமைந்து கிடக்கிறது அகிலம். பாண்டிய நாட்டின் எல்லைகளைத் தேடினால் அது ரோமாபுரி வரை நீண்டு கிடக்கிறது. உலக நாகரிகத்தின் ஆதி நகரங்கள் வைகையில் நீராடிய பின்னரே வரலாற்றில் முழுமை அடைந்திருக்கின்றன. உலகின் ஆதி மொழியான தமிழோ, நாகரிக வாழ்வின் தொடக்கமோ எதுவாயினும் மதுரை மண்ணில் புரண்டெழுந்த பின்பே அங்கீகரிக்கபட்டிருக்கிறது.

இவ்வாறான வரலாற்றுப் பெருமையை தாங்கி நிற்கும் மதுரையை மகுடமாய் தலையில் சூட்டிக்கொள்ளும் மண்ணின் மைந்தர்களுக்கு மேலும் கணம் சேர்க்கும் விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.


கீழடி நோக்கிய பசுமைநடையின் பயணம் உண்மையில் ஒரு வரலாற்றுப் பயணம். பசுமைநடை வரலாற்றில் விழாக்கள் தவிர்த்த மற்ற நடைகளில் ஏறக்குறைய 500 நபர்கள் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. கைக்குழந்தைகள் தொட்டு கம்பூன்றி நடக்கும் தாத்தாக்கள் வரை குடும்பங்களாக கலந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வு, அதிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூடிய அர்ப்பணிப்பு என பொது வெளியில் இயங்குபவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மக்களின் பங்களிப்பை, அன்பைப் பெற்றிருக்கிறது பசுமை நடை.


எப்போதும் போல் இல்லை இந்த நடை. இன்னீர் மன்றல் தந்த ஆச்சர்ய அனுபவம், புது நபர்களுக்கு புத்தகத் திருவிழாவில் கிடைத்த விளக்கம், கீழடி அகழாய்வு குறித்து ஊடகங்கள் பகிர்ந்த செய்திகள் என கலந்துகட்டிய உற்சாகம் பார்வையாளர்களை பெருந்திரளாக கொண்டுவந்து சேர்த்திருந்தது. மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கே இருக்கும் மருதிருவர் சிலையை ஒட்டிய பகுதியில் ஒரு திருவிழாக் கூட்டம் திரள ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு பசுமைநடைக்கு வந்திருக்கும் வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு இட நெருக்கடி. அதனால் அங்கிருந்து கிளம்பிய நடை மேற்கே நேர் வழியில் செல்லாது வடக்கே திரும்பி தெப்பக்குளக் கரையோரம் ஒருசேர பயணித்து மீண்டும் இராமநாதபுர முக்கிய சாலையை தொட்டு பயணித்தது. சாலையில் ஒருசேர சென்ற வாகன அணிவகுப்பு ஒரு ஊர்வலத்தின் தோற்றம் தந்து சிலமானை அடைந்தது.


சிலைமானில் இருந்து வலதுபுறம் கீழடியை நோக்கி திரும்பியவுடன் பசுமைநடை பயணம், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிய காலப்பயணமாய் பரிணாமம் அடைந்தது.  அதுவரையில் 2015 ல் பயணித்த மனதும் உணர்வும், தூரத்தில் எங்கேயோ ஸ்பீக்கர் குழாய்களில் ஒலித்த டி.ஆரின் மெஸ்மெரிச பாடல்களில் லயித்து 80 களுக்கு மடைமாற்றம் அடைந்தது.. பயணித்துக் கொண்டிருக்கையில் தெரியவில்லை இந்த பயணச் சக்கரம் காலச் சக்கரத்தில் என்னை/எங்களை பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறதென்று. வெளிவட்ட சாலை குறுகி, தார்சாலை ஊர்சாலையாக பரிணமித்து, ஊர்சாலை ஒற்றையடி பாதையாக மாறி திடீரென ஒரு தோப்பில் விஸ்தரிக்கும் பொழுது நம் முன் தெரிந்தது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்று நகரம்.


ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு வனம் தாண்டி இருக்கும் நகரமும் அங்கு உயிர் வாழும் அழகிய இளவரசியோ, கிளியோ, அதில் இருக்கும் மந்திரவாதியின் உயிரோ எதுவோ, சிறுவயதில் நான் படித்த மாயஜால கதைகளிலெல்லாம் தவறாமல் இடம்பிடிக்கும் வர்ணனை இது. கீழடி அகழாய்வில் மீண்டெழுந்த புதைநகரை பார்த்த கணத்தில் அந்த மாயஜால வர்ணனை மிகுந்த நகரை பார்த்த உணர்வு. அனால் இங்கு இளவரசிகளோ, மந்திரவாதிகளோ வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளெல்லாம் எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பவை. அவர்கள் எல்லோரும் மன்னர்களாய், இளவரசர்களாய், ராணிகளாய், இளவரசிகளாய் வாழ்ந்திருந்திருக்கலாம். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டமைக்கப்பட்டிருந்த நாகரிகமான நகரம் மதுரை. தோண்டத்தோண்ட இங்கு கிடைத்தவையெல்லாம் புதையல்கள் அல்ல அதிசயங்கள். அதுவரையிலான வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடக்கூடிய அற்புதங்கள்.


அரிசி புடைத்துக்கொண்டிருந்த கிழவி கோழியை விரட்ட தங்கத் தண்டட்டியைக் கழட்டி எறிந்த தமிழர்களின் செழிப்பான வரலாற்றுக் கதையை மெய்ப்பிக்கும் விதமாக கிடைத்த தந்தத்திலான தாயக்கட்டைகள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்திற்கு ஒரு பானை சோறு. மதுரை தமிழகத்தின் வரலாற்றுத் தலைநகரம் என்பது உலகறிந்ததே. ஆனால் வைகை தமிழக நாகரித்தின் தொட்டில் என்பதை கீழடி அகழாய்வு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


டார்வினின் கூற்றுப்படி விவாதிப்போமேயானால் உலகத்தின் மற்ற பகுதிகளில் குரங்குகள் முழு பரிணாம வளர்ச்சியை எட்டும் முன்னரே ஆதித் தமிழகமான லெமூரியா கண்டத்தில் மனிதர்கள் எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். கிறித்தவமும், இசுலாமும் நம்பும் கூற்றுப்படி சிந்திப்போமேயானால், இராமேஸ்வரம்-இலங்கை இடையிலான கடற்கரையில் சேதுகால்வாய் திட்டத்திற்காக தோண்டி ஆழப்படுத்தும் இராமர் பாலம் என்கிற மணற்திட்டு ஆங்கிலத்தில் உலகின் முதல் மனிதனான ஆதமின் பெயராலேயே (Adam Bridge) வழங்கப்பட்டு வருகிறது. தமிழகமே ஒரு வரலாற்றுப் புதையல். மதுரை அதன் பொக்கிஷம். உலகின் மற்ற மூலைகளில் மனிதர்கள் வேட்டையாடித் திரிந்த போது இங்கு விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆடையின்றி உலவும் போது இங்கு அணிகலன்கள் வடிவம் பெற்றிருந்தன. அவர்கள் ஓய்வு குறித்து சிந்திக்கும் போது இங்கு செங்கல் கட்டிடங்கள் எழும்பியிருந்தன. அவர்கள் எழுதப் பழகும் முன்னரே இங்கு இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தன.


கீழடி அகழாய்வு நமக்கு அக்கால மதுரை மக்கள் தேர்ந்த நாகரிகத்தோடு, ஒரு ஒழுங்கமைவில் எத்துனை செழிப்பாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருபுறம் காதுகளில் தங்கத் தண்டட்டிகள் ஆட, அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய தந்தத்திலான தாயக்கட்டைகள் கொண்டு கிழவிகள் தாயம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ரோமபுரி ராணியும் அணிய ஏங்கும் வெண்முத்தாலான பாசிகளை தங்கள் சங்குக்கழுத்தில் அணிந்த கன்னிப்பெண்கள் மலரினும் மெல்லிய தங்கள் வெள்ளி விரல்களால் சொட்டாங்கல்லுக்குப் பதில் தங்கக் கட்டிகளை வைத்து விளையாடியிருந்திருக்கின்றனர். சுட்ட செங்கற்கள் வீடுகள், உலோகப்பானைகளில் உணவு, பசியும் பட்டினியும் கனவு என வாழ்ந்திருக்கின்றனர். சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் என இந்த அகழாய்வில் கிடைத்ததெல்லாம் நம் செழிப்பான வரலாறு.


கீழடி, மற்ற பசுமைநடைகளில் இருந்து சற்று வேறுபட்டது. இம்முறை மலையேற்றம் இல்லை, பக்தி உணர்வைத் தரும் கோயில்கள் இல்லை, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் இல்லை. ஒரு தென்னந்தோப்பும், நாலு டெண்ட்டுகளும், தோண்டப்பட்ட நாற்பது குழிகளும் மட்டுமே. ஆனால் இந்த நடை பசுமைநடையின் வரலாற்றில் ஒரு மைல்கல். பிறந்து இன்னும் நடை பழகாத குழந்தையிலிருந்து, கம்பூன்றி நடக்கும் முதியவர்வரை, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரு மாநாட்டுக் கூட்டம் கலந்து கொண்ட நடை இது. எத்தனை பேர் வந்தாலும் தெளிவான திட்டமிடுதலுடன், நேர்த்தியாக கையாண்ட விதம் வியப்பிற்குரியது. அதற்கு பசுமைநடையின் மிகப்பெரும் திருவிழாக்களும் அதில் கிடைத்த அனுபவப் புரிதல்களும் பக்கபலமாக இருந்தன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்கு பங்கேற்பாளர்களும், அவர்கள் பசுமைநடையில் கடைபிடிக்கும் சீரிய ஒழுங்கும் மிக அடிப்படையான காரணங்கள். பசுமைநடையின் ஸ்திரத்தன்மைக்கும் அதுவே காரணம்.



வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்கள். மதுரையும் அப்படி ஒரு வாழ்ந்து கெட்ட நகரமாகிப் போனது. ஆதியில் இருந்ததில் பாதி கூட இல்லை இப்போது. கீழடி வெளிக்கொணர்ந்திருப்பது நம் மிச்சம் மீதி வரலாறு. பதிவு செய்யப்படாததாலும், பாதுகாக்கப்படாததாலும் மண் மூடிப்போன வரலாற்றை மீட்டெடுத்து உயிர்ப்போடு இயங்க ஆவன செய்கிறது பசுமைநடை. பசுமைநடை பதிவு செய்து கொண்டிருப்பது ஆவணங்களை அல்ல வரலாற்றை. இம்மாதிரியான வரலாற்றை தெரியப்படுத்தி, என்னை, எனது வரலாற்றுப் பெருமையை உணரச் செய்து, உலகின் முன் கர்வத்தோடு பெருமிதமாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உற்ற காரணமாய் இருக்கும் பசுமை நடைக்கு உளமார்ந்த நன்றிகள்.   
---
பா.உதயக்குமார்...
---
படங்கள்: அருண் பாஸ் மற்றும் ஆனந்த்...

Thursday, 9 January 2014

யானைமலையில் பசுமைநடை (29)...


என்ன மாப்ள 2-3 நாளா உன் போன் ரீச் ஆகல?

ஆமா மாப்ள, புனே போயிருந்தேன்டா அதான் சுவிட்ச் ஆப் பண்ணிருந்தேன், ஏன்டா?

வேற ஒண்ணுமில்லை, போன ஞாயித்துக்கிழமை உங்க ஏரியாவுக்கு வந்திருந்தோம் அதான்.

வந்திருந்தோமா? யார்யாரெல்லாம்? எதுவும் முக்கியமான விசயமா?

இல்ல மாப்ள, சும்மா தான் கிரீன் வாக்ல இருந்து யானைமலைக்கு வந்திருந்தோம். சரி நீ வீட்ல இருந்தா உன்னையும் வர சொல்லலாம்னு தான்.


கிரீன் வாக்னா இந்த மலை மலையா போவிங்களே அதான? இந்த வாட்டி யானைமலையாக்கும்? உங்களுக்கு யானைமலையைப் தெரியுமா?

எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும். உனக்கு முழுசா தெரியுமா?

ஏன் தெரியாம? எங்களுக்கு இந்த மலையே சாமிடா. இங்க நரசிங்கப்பெருமாளுக்கு குடைவரை கோயில் இருக்கு. ரொம்ப பழமையான கோயில்.


வேற என்ன தெரியும்?

வேற என்ன இருக்கு?

இந்த மலையில சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? லாடன் கோயில் இருக்கு தெரியுமா?


ஆமா, மலை மேல கொஞ்ச தூரத்துல கல்வெட்டுலாம் இருக்கு. ஏதோ பஞ்ச பாண்டவர், முனிவர்லாம் இருந்த இடம்னு சொல்லுவாங்க. அதென்ன சமணர் படுக்கை? லாடன் கோயில்?

அது என்னன்னு சொல்றேன். கல்வெட்டுலாம் இருக்குனு சொன்னியே அதுல என்ன எழுதிருக்குனு தெரியுமா?

கல்வெட்டு இருக்குனு தான் தெரியும். அதுல என்ன இருக்குனு தெரியாது.

ஆனா எனக்கு தெரியும். இந்த மலையைப் பத்தி உனக்கு தெரியாததெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு மட்டுமில்ல, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், விருது நகர், ராமநாதபுரம், வத்ராப் அப்புறம் மதுரைக்குள்ளயே  அங்க இங்கனு  கிட்டத்தட்ட இப்போ 250  பேருக்கும் அதிகமானவங்களுக்கு தெரியும்.


என்னடா சொல்ற? எங்க ஊரைப்பத்தி எனக்கே தெரியாததெல்லாம் எங்கெங்கயோ இருந்து வந்து தெரிஞ்சுட்டு போயிருக்காங்க. நீ சொல்லும்போது எனக்கே வெக்கமா இருக்கு மாப்ள. தயவுசெஞ்சு கொஞ்சம் அதபத்தி சொல்லுடா, நானும் தெரிஞ்சுக்குறேன்...

ஹா ஹா. சொல்றேன் மாப்ள. உங்க ஊரு பேரு மொதல்ல, அதாவது 9-10 நூற்றாண்டுல நரசிங்கமங்கலம், இப்போ தான் அது நரசிங்கம்னு சுருங்கிடுச்சு. நான் சொல்லல, கல்வெட்டு சொல்லுது. இந்த மலையோட உயரம் 90 மீட்டர், அகலம் 1200 மீட்டர்,  நீளம் 4000 மீட்டர்.  



நாம நிக்கிறதுக்கு நேரா தும்பிக்கை மாதிரி தெரியுது பாரு அங்க ஒரு இடத்துல இயற்கையாவே சின்ன குகை மாதிரி இருக்கும். அங்க கொஞ்சம் சமணர் படுக்கைகளும், ஒரு தமிழ் பிராமி கல்வெட்டும் இருக்கு. சமணர் படுக்கைனா என்னன்னா, மதுரையை சுத்தி இருக்கிற அதிகமா ஆள் நடமாட்டமில்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற மலைகள்ல யார் தொந்தரவும் இல்லாம இருக்கனும்ங்கறதுக்காக சமணத் துறவிங்க வந்து தங்கினாங்க. அவங்க தங்குறதுக்கு வசதியா கல்லுலயே படுக்கை மாதிரி வெட்டி குடுப்பாங்க, அதான்.



யானைமலையில அந்த இடத்துக்கு போறதுக்கு நரசிங்கம் மெயின் ரோட்ல போலீஸ் ஸ்டேஷன் தாண்டுனதும் வலது பக்கம் ஒரு சந்து மாதிரி போகுதுல, உனக்கு தான் தெரியுமே அந்த வழியாத் தான் போகணும். 



ஆனா மேல கொஞ்சம் சிரமப்பட்டு தான் மாப்ள ஏறனும். கொங்சதூரம் படி இருக்கு, அப்புறம் ஒரு இடத்துல இரும்புட்ட படி போட்ருக்காங்க. அதத் தாண்டி போனா தான் நான் சொல்ற படுக்கைகளும், கல்வெட்டும் வரும்.



அந்த கல்வெட்டுல என்ன போட்ருக்குனா,
“இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
அப்டின்னு போட்ருக்கு. இதுல இவம் அப்டினா சமஸ்கிருதத்துலயும், பிராகிருதத்துலயும் யானைன்னு அர்த்தம். அதாவது 2000 வருசத்துக்கு முன்னாடியே இதுக்கு யானைமலைன்னு பேர் இருந்திருக்கு. உறையுள் அப்டினா தங்குமிடம், பாதந்தான் அப்டினா பாய் அல்லது படுக்கை. அதையே பதந்தன்ன்னு வாசிச்சா மரியாதைக்குரியவர்னு அர்த்தம். அட்டவாயி/அத்துவாயின்னா சொற்பொழிவாளர்ன்னு அர்த்தம். காயிபனை காஸ்யபன்ற கோத்திர பேராகவும் அர்த்தப்படுத்திக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா ஏரி அரிதன் மற்றும் அத்துவாயி அரட்டகாயிபன்ங்கிற ரெண்டு சமணத்துறவிகளுக்காக யானைமலையில வெட்டிக்குடுத்த படுக்கை அப்டின்னு அர்த்தம்.


மாப்ள, இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? இத்தனை நாள் எனக்கு தெரியாமப் போச்சே மாப்ள. சரி மலைமேல ஒரு யானைக்கண்ணீர் ஊற்று இருக்கே? போனிங்களா?


அது தெரியும் மாப்ள. ஆனா இந்த தடவ போகல. இன்னொரு நாளைக்கு மலைக்கு மேல நடக்கனும்னு சொல்லிருக்காங்க. அன்னைக்கு போவோம்.
மாப்ள, அப்புறம் நரசிங்கம் கோயிலுக்கு போற வழியில நிறைய சமண சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் இருக்கு. அதையெல்லாம் இந்த தடவ பாக்கல. ஏற்கனவே அங்க போய்ட்டு வந்துட்டோம். ஆனாலும், புதுசா வந்தவங்களுக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தோட ஹிஸ்டரி ப்ரொபசர் கண்ணன் சார் கொஞ்சம் சொன்னாரு.



நரசிங்கபெருமாள் கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி வலது பக்கம் திரும்பி போனா 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், அப்புறம் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி சிலைகள் இருக்கு. அதுக்கு மேலயெல்லாம் சுண்ணாம்பு பூசி அழகழகா கலர்ல ஓவியம் வரைஞ்சிருக்காங்க. அது சித்தன்ன வாசல் ஓவியம் வரைஞ்ச காலகட்டத்தை சேர்ந்ததுன்னு சொன்னாரு. யோகநரசிம்மர் கோயிலும், லாடன் கோயிலும் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாம்.



பாத்தியா உங்க ஊரு மலை எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு. இப்பிடிப்பட்ட மலையைத் தான் சிற்ப நகரா மாத்தணும்னு முயற்சி பண்ணாங்க. அப்போ ஆரம்பிச்சது தான் பசுமை நடை. அதுனால இந்த மலை பசுமைநடையோட வரலாற்றுலயும் இடம் பிடிச்சுருச்சு.


அப்டியா மாப்ள. நான் கூட எங்க மலைய உடைக்கக்கூடாதுன்னு பயலுகளோட சேந்து ரோட்ட மரிச்சேன் மாப்ள. சரி மாப்ள, யாரு வேணாலும் பசுமை நடைக்கு வரலாமா? எப்போலாம் போவிங்க? சேரணும்னா என்ன பண்ணனும்?


யாரு வேணாலும் சேரலாம் மாப்ள. ஒவ்வொரு மாசமும் ஏதாவதொரு ஞயிற்றுக்கிழமை அன்னைக்கு காலைல வெள்ளன 6 மணிக்கெல்லாம் போய்ட்டு 9-10 மணிவாக்குல முடிச்சு திரும்பிடுவோம். இத SMS / Face Book மூலமா தான் ஒருங்கிணைக்கிறோம். இதுல சேரணும்னா 97897 30105 ன்ற நம்பரை தொடர்பு கொண்டா போதும். Face Book ல போய் Green Walk ன்ற பேஜ் பாரு மாப்ள.

அ.முத்துக்கிருஷ்ணன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார்ல?


ஆமா, இந்த விஜய் டிவில எல்லாம் வருவாரே, நீயா நானவுல?

அவரே தான். அவரு தான் இத மொத மொதல்ல ஆரம்பிச்சாரு. அப்புறம் அவரோட நண்பர்கள், பொது மக்கள்னு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 800 பேர் வரை பசுமைநடையில உறுப்பினர் ஆகிருக்காங்க மாப்ள. இந்த தடவ கூட 250 பேர் வந்துட்டாங்க. அதான் ஏற்கனவே சொன்னேன்ல?


யே யாத்தே! அம்புட்டு பெரும் காலங்காத்தால எந்திரிச்சு வந்துர்றாங்களா மாப்ள? அதுவும் வெளியூர்கள்ல இருந்தெல்லாம் வர்றாங்கன்னு வேற சொல்ற?

அதெல்லாம் ஒவ்வொரு தடவையும் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது மாப்ள. இதுல அவ்வளவு பேருக்கும் காலை சாப்பாடு வேற தர்றோம் மாப்ள. அதுவும் கட்டணமில்லாம. ஆனா யாராவது தானா முன்வந்து ஏதாவது குடுத்தா வாங்கிக்குவோம்.

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் மாப்ள. பசுமைநடைக்கு கும்பகோணத்துல இருந்து முருகராஜ்னு ஒரு நண்பர் வர்றாரு. அவரும் அவரு நண்பர்களும் சேந்து சஞ்சிகைனு ஒரு சின்ன பத்திரிகை நடத்துறாங்க. அதுல பசுமைநடையைப் பத்தி தொடர்ச்சியா பதிவுபண்றாங்க. நான் கூட கட்டுரை எழுதிருக்கேன். இந்த மாசத்தோட சஞ்சிகை இதழ அங்கன மலை மேலேயே வச்சு வெளியிட்டாப்ள. வந்தவங்களுக்கும் அதுல ஒரு சந்தோசம்.


பரவாயில்லையே மாப்ள. யானைமலை சிற்பநகரா மாத்துனப்ப ஆரம்பிச்சதுன்னு சொல்ற? அப்டினா கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கு மேல ஆச்சே. இவ்ளோ நாளு இத கட்டணமில்லாம நடத்துறதே பெரிய விஷயம் தான் மாப்ள. உண்மையிலேயே எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டணும். எனக்கும் இப்போ ஆர்வமாயிடுச்சு மாப்ள. அடுத்த மாசத்துல இருந்து நானும் வர்றேன். அதுக்கு முன்னாடி யானைமலையை பயலுகளோட ஒரு வாட்டி சுத்திப்பாக்கப் போறேன். நிறைய விசையம் சொல்லிருக்க. ரொம்ப நன்றி மாப்ள.

சரி மாப்ள. நீ பாத்துட்டு வா. நாம அடுத்த நடையில அதப்பத்தி பேசலாம். அடுத்த நடை மேலக்குயில்குடிக்கு போறோம், ஜனவரி 26 ம் தேதி. அங்க சந்திப்போம். பாய்.


- உதயக்குமார் பாலகிருஷ்ணன்... 

ஒளிப்படங்கள்:

அருண் பாஸ், எப் ஜெய், மதுமலரன், ஷாஜகான், சுந்தர், P.G.சரவணன்...