Thursday 14 January 2016

பசுமைநடை நாட்காட்டி – 2016...

காலம் - அது ஒரு மந்திரச்சொல்... அதன் பயணத்தில் நம் வாழ்வும் இயல்பும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கடந்துவிட்ட காலத்தை மீட்டெடுப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொருவருக்குள்ளும் இந்த கால மாற்றத்தின் நினைவுகள் உறைந்திருக்கின்றன. நினைவுகளின் வழியே அவை உயிர்ப்போடு இருக்கின்றன.

ஆங்கிலத்தில் John Keats எழுதிய Ode on A Grecian Urn வாசித்திருக்கிறீர்களா? அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இறந்தவர்களின் சாம்பல் போட்டுவைக்கும் தாழியை (குவளை) வர்ணித்து எழுதப்பட்ட கலிப்பாடல் மாதிரியான ஒரு கிரேக்க கவிதை. அந்த கவிதை முழுவதிலும் அந்த தாழியில் வரையப்பட்டிருக்கும்/செதுக்கப்பப்பட்டிருக்கும் காட்சிகள், அதன் தருணங்கள், அதன் உயிர்ப்புத்தன்மை மிகுந்த ரசனையோடு புனையப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பதைப் போல ஒரு காட்சி செதுக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் இயல்பை, அந்த தருணத்தின் உயிர்ப்பை கவிஞர் இப்படி வர்ணித்திருப்பார்.
Heard melodies are sweet, but those unheard are sweeter”. நாம் ஒருவர் வாசிக்கும் இசையை கேட்டுவிட்டால் அது அந்த நேரத்திற்கான ரசனை மட்டுமே. ஆனால் இங்கு இவன் வாசிக்கும் இசை என்னவாயிருக்கும், அது எந்த மாதிரியான உணர்வை நமக்குள் கடத்தும் என்பது நம் சிந்தனையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் அந்த இசை நமக்குள் ஒரு ரசனையை கடத்திக்கொண்டேயிருக்கிறது. அந்த காட்சி நமக்கு மீண்டும் மீண்டும் அந்த உணர்வை கொண்டு வந்து சேர்க்கிறது. இது தான் காட்சிப் படிமமாக்கப்பட்ட உணர்வுகளின், தருணங்களின் இரசவாதம்.
காலத்தை, அதன் இயல்புகளை, அது தந்த நினைவுகளை, காட்சிப்படிமங்களாக, ரசனை மிகுந்ததாக உறைபனியாய் உறையச்செய்யும் லாவகம் ஓவியத்திற்கு, சிற்பத்திற்கு, புகைப்படத்திற்கு, எழுத்திற்கு உண்டு. நவீன யுகத்தில் புகைப்படங்களின் வீச்சு அலாதியானது. அதன் எளிமையும், தொழில்நுட்பமும் அதனை சாத்தியப்படுத்துகிறது. செல்போன்களில் கேமரா வந்த பிறகு காணும் யாவையும் கைக்குள் வசப்படுத்தி பத்திரப்படுத்த முடிகிறது. புகைப்படக்கலைஞர்களின் நேர்த்தியைப் பொறுத்து அதன் நுணுக்கங்களும், ரசனையும் மட்டுமே மாறுபடுகிறது. மற்றபடி நினைவுகளின் உயிர்ப்புத்தன்மை காட்சிப்படிமமாக மீட்டெடுக்கப்படுகிறது.
நினைவுகளின் பேராற்றல் அந்த தருணங்களை (Moments) அப்படியே காட்சிபடிமமாக, ரசனை மிகுந்ததாக, அதே உயிர்ப்புடன் மீட்டுத்தருவதில் அடங்கியிருக்கிறது. அதனால் தான் நாம் மனிதர்களை, அந்த தருணங்களை நினைவில் கொள்ள வழங்கும் பரிசுப்பொருட்களுக்கு நினைவுப் பரிசு (Memento) என பெயரிட்டிருக்கிறோம்.


எல்லாப் பரிசுகளுமே நினைவுப்பரிசுகளாக ஆகிவிட முடியாது. நாம் வழங்கும் பரிசும், அந்த பரிசை தெரிவு செய்வதற்கான அல்லது தயார் செய்வதற்கான மெனக்கெடல்கள், அதனை வழங்கும் முறை, தருணம் என எல்லாமுமே பரிசைப்பெறுபவர் அந்த தருணத்திலும், அந்த பரிசு மீட்டெடுக்கும் தருணத்திலும் மகிழ்ந்து லயித்துக் கிடக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
சிலருக்கு நாம் பரிசு வழங்குவது மட்டுமே முக்கியம். சிலருக்கு நாம் என்ன பரிசு வழங்குகிறோம் என்பதும் முக்கியம். நாம் எதிர்பாராதவொரு தருணத்தில் நமக்கு கிடைக்கும் பரிசுகள் நம்மை மகிழ்ச்சியில் மட்டுமல்லாது ஆச்சர்யத்திலும் திளைக்கச் செய்கின்றன. 
நினைவுகளை மீட்டெடுக்க பரிசுகளும், அந்த பரிசுகளே பல நினைவுகளை தருவதும் இனிய முரண். பரிசளிப்பதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை அல்லது அந்த தருணத்தை, ஒரு நிகழ்வை நினைவுறுத்த வழங்கப்படுவது. மற்றொன்று நல்ல நினைவுகளையே பரிசளிப்பது. நம் எல்லோருக்குமே மறக்ககூடாத நினைவுகள் சில இருக்கும். எப்பாடுபட்டாவது மறந்துவிட வேண்டும் அல்லது நம் நினைவிற்கே வரக்கூடாது என்பது போன்ற நினைவுகளும் சிலருக்கு இருக்கலாம். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை", "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா" வகையறா பாடல்கள் எல்லாம் இந்த வகை தான். ஆனால் நல்ல நினைவுகளை மீட்டெடுப்பதென்பது நம்மை தொடர்ந்து உயிர்ப்போடு இயங்கச் செய்யும்.



கடந்த 10/01/2016 ஞாயிறன்று மாடக்குளம் சென்ற பசுமைநடையும் ஒரு வகையில் என் பால்யத்தை, என் குழந்தைமையை, நான் களித்துணர்ந்த மகிழ்வான தருணங்களை மீண்டும் எனக்கு நினைவூட்டியது. அதன் தொடர்ச்சியாக பசுமைநடை நிகழ்த்திய இம்மாதிரியான இரசவாத தருணங்களை இந்த ஆண்டு முழுவதிலும் நினைத்து கொண்டேயிருக்க, அதனை தொடர்ந்து ஞாபகப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது பசுமைநடை நாட்காட்டி. 


பசுமைநடையின் பொன்னான சாதனைத் தருணங்களை, அதன் உயிர்ப்பான உணர்வுகளை ஆண்டு முழுவதிலும் அசைபோடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாட்காட்டி. நினைவுகளின் வழியே மகிழ்வான தருணங்களை மீட்டெடுக்க அதில் அச்சிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நமக்கு சிறந்த நினைவூட்டிகளாக இருக்கின்றன. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் பசுமைநடையினர் அனைவருக்கும் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இந்த பசுமைநடை நாட்காட்டி. நல்ல தருணங்களை நமக்கு வழங்கியதோடு அதன் நினைவுகளையும் தொடர்ந்து பரிசளிக்கும் பசுமைநடைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண்பாஸ், விஷ்ணு வர்த்தன்...

Sunday 10 January 2016

நெனப்பு வந்துச்சு அவனுக்கு : பாகம் – 3 (GW 54 – மாடக்குளம்)...


பசுமைநடையில இருந்து இந்த தடவ 54-வது நடையா மாடக்குளம் போறதா sms வந்ததும், 30 வயசு மனசு தடதடன்னு 20-25 வருஷம் பின்னாடி போய் தண்டவாளம் வழியா நடந்து கொவ்வாலி மலைக்குப் போனது நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


கொவ்வாலிமலை, மாடக்குளம் கம்மா, கோர வாய்கா, 12-ம் பாலம், செம்மண் பிச்சு, கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டரு, அம்மாசிக் கிணருன்னு சின்ன வயசுல விழுந்து, கிடந்து, விளையாண்டு, குளிச்சு, சுத்தினு எல்லாம் நெனப்பு வர மனசெல்லாம் பூத்துக் கெடந்தது அவனுக்கு.


வீட்ட ஒட்டினாப்ல இருக்கிற, மதுரையில இருந்து போடிக்கு போற தமிழ்நாட்டோட கடைசி மீட்டர் கேஜ் ரயிலு தண்டவாளம் தான் அவங்க ஏரியாவுக்கே கக்கூசு. அதுல அவன் வீட்டுக்கிட்ட இருக்கிறது ஆறாம் பாலம். கொவ்வாலி மலை பன்னெண்டாம் பாலம் தாண்டியிருக்கு. வெளிக்கி இருக்கிறதுக்கு எத்தனாம் பாலம் தூரம் போறோங்கறத பொறுத்து அவங்க வயசு இருக்கு. சுள்ளாய்ங்க எல்லாம் 6, கொஞ்சம் வயசு அதிமாக ஆக அப்டியே 7, 8, 9 ன்னு தூரம் போவாய்ங்க. லேடீஸ் எல்லாம் ராத்திரிலயும், கருக்கல்லயும் இருட்டுக்குள்ளயே போய்ட்டு வந்துருவாக. லீவன்னைக்கெல்லாம் காலையில தண்டவாளத்துக்கு போய்ட்டு அப்டியே அந்த வழியாவே மலைக்கு போய் பக்கத்துல கம்மாயில குளிச்சுட்டு, மலை மேல போய் உக்காந்து வெளாடுறது தான் வழக்கமான பொழுதுபோக்கு அவனுக்கு.

சிலவேள தூக்குவாளி நெறைய புளிச்சோறு கட்டி, தொட்டுக்க பெரண்ட தொவய அரச்சு, 10 மாம்பழத்தயும் எடுத்துப் போட்டுக்கிட்டு, கொஞ்சம் மாங்கா கீத்து மொளகாப்பொடி போட்டு டிப்பன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு, வாட்டர்கேன்ல தண்ணியும் புடிச்சுக்கிட்டு வீட்டோட கிளம்பி பிக்னிக் போயிருவாக மலைக்கு. காலையில கிளம்பி போனா பொழுதடைய தான் வருவாக வீட்டுக்கு. அப்புறம் அடிக்கடி அவங்க அம்மா கூட மொத்தமா சேந்த துணி தொவைக்க பொட்டலம் கட்டிக்கிட்டு கோர வாய்க்கா கிளம்பிருவாக அவன், அவன் தம்பி, அண்ணன், மாமன், மச்சினன், சினேகிதங்க எல்லாம். ஒரு பக்கம் அவங்க அம்மா தொவைக்க மறுபக்கம் அவிய்ங்க எல்லாம் தண்ணிக்குள்ள குதியாட்டம் போட்டு திரிவாய்ங்க.  


இப்ப இருக்கிற பிள்ளைக மாதிரி வீட்டுக்குள்ளயே ஒத்தையில செல்போனுல கேம் விளையாடுற மாதிரி இல்ல அப்ப. அவஞ்சோட்டு பயலுவல்லாம் ஒண்ணா தான் திரியுவாக, வெளாடுவாக. எப்பயும் பத்து பதினஞ்சு பேரு கிட்டி, சில்லாக்கு, கோலிகுண்டு, பிள்ளபந்து, எறிபந்து, கள்ளன் போலிசு, பம்பரக்கட்டை, பரமபதம், தாயம், கம்புதள்ளி, கிரிக்கட்டுன்னு எதாச்சும் வெளாண்டுட்டே தான் இருப்பாக. அப்பறம் எல்லாரும் சேந்து கோர வாய்க்கா இல்லேனா கரும்பு மோட்டரு, மாங்கா மோட்டரு, தொட்டி மோட்டருன்னு எங்க தண்ணி வருதோ அங்க குளிச்சு குதியாட்டம் போட கிளம்பிருவாக. கம்மாயில தண்ணி வந்தா போதும் வேற வெளாட்டே வேணாம். பொழுதுக்கும் எருமையாட்டம் கம்மாத் தண்ணியிலயே ஊறிக் கெடப்பாய்ங்க. கம்மாயில இக்கரைக்கும் அக்கரைக்கும் போட்டி வச்சு நீந்தி ஜெயிக்கிறது தான் வெளாட்டு. ஒருவாட்டி கூட ஜெயிச்சதே இல்ல அவன். ஆனா எல்லா தடவையுமே போட்டில கலந்துகுவான். குளிக்கிறது மட்டுமில்ல மடையில உக்காந்து தூண்டிபோட்டு மீன் பிடிச்சு வீட்டுக்கு கொண்டுபோறது, அய்யனார் கோவில்ல பொங்க வாங்கி திங்கிறது, வீட்டுக்கு போற வழில தண்டவாளத்துக்கு ரெண்டு பக்கமும் மொளச்சு கெடக்குற பெரண்டை பறிச்சுட்டு போய் ஊறுகா போட குடுக்குறது எல்லாமே லீவுல நெதம் நடக்குற சங்கதி.  


கம்மாயில கரையில முங்கி முங்கு நீச்சல்லயே போய் முட்டி எந்திரிக்கிற குத்துக்கல்லு 12-ம் நூற்றாண்ட சேந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுன்னு பசுமை நடையில சாந்தலிங்கம் ஐயா விளக்கி சொல்ற வர தெரியாது அவனுக்கு. அந்த கல்லு மேல நின்னு தலைகீழா டைவு அடிச்சு குளிச்சிருக்கானே தவர அந்தக் கல்லுல அருவா, சாமரம், குடை, கலப்பைனு செதுக்கிருந்ததையும், “இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்” ன்னு வெட்டிருந்ததையும் இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கூட கவனிச்சதே இல்ல அவன். அவஞ்சோட்டு பயலுவலும் அப்படித்தான்.


அவனுக்கு தெரிஞ்சதெல்லாம், மாடக்குளம் ரொம்ப பெரிய கம்மா. அது ரொம்ப பழைய காலத்து கம்மா. கம்மா ஒடஞ்சா மதுரை அழிஞ்சு போவும். அது ஒடயாம இருக்க கம்மா கரையில ஈடாடி அய்யனார் காவ இருக்காரு. அவரு காவ இருக்கதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. அது என்னெனா, முன்னாடி ஒருநா இப்டித்தான் கம்மா பெருகி மடை ஒடயப்போற சமயத்துல அத பாத்த ஊருக்காரன் ஒருத்தன் கரையில இருக்கிற அய்யனாருகிட்ட எப்படியாவது கம்மா ஒடயாம ஊரக் காப்பாத்திடு. அதுக்கு ஈடா என் தலைய வெட்டி உனக்கு காணிக்கை குடுக்குறேன்னு மடயில கொண்டு போய் தலைய வச்சு தானே சிரச் சேதம் பண்ணிக்கிட்டானாம். அன்னையில இருந்து கம்மா ஒடயாம ஈடாடி அய்யனாரு ஓடோடி காவ காக்குறாராம். அதுக்கு மலை மேல இருக்கிற கொவ்வாலியும் (கபாலீஸ்வரிய கபாலின்னு கூப்பிட்டு பின்னாடி பேச்சு வாக்குல அது கொவ்வாலி ஆயிடுச்சு) தொணையிருக்குதாம். இது அவுக அய்யா அவனுக்கு சொன்ன கத. ஆனா அந்த மடைக்குப் பேரு “திருவாலவாயன் மடை” ங்கிறதும், அது மீனாட்சி சொக்கர குறிக்கிறதுங்கிறதும் பசுமைநடைக்கு போனப்போ தான் தெரிஞ்சுச்சு அவனுக்கு.


எடையில காவல்கோட்டம் நாவல் படிக்கையில அதுலயும் மதுரையோட எல்லையா மாடக்குளம் இருந்துச்சுன்னும், இதே மாதிரி மடைய மையமா வச்சு ஒரு தலைவெட்டி கதை வந்ததும், மாடக்குளத்துல மட்டும் கள்ளய்ங்களால கருது கசக்கிட்டு போக முடியலங்கிற சேதியும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு.


அவங்க ஊரும், அவன் வெளாண்ட எடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு காலத்துல மதுரையே மாடக்குளத்த அடிப்படையா வச்சுத் தான் வளந்திருக்குன்னு பசுமைநடையில எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அப்டியே பெருமையில பூரிப்பா இருந்துச்சு அவனுக்கு. அதுக்குச் சான்றா அவரு,  பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுல “மதுரோதய வளநாட்டில் மாடக்குளக்கீழ் மதுரை” ன்னு இருக்குறதயும், “மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம்”, “மாடக்குளக்கீழ் அரியூர்”, “மாடக்குளக்கீழ் கொடிமங்கலம்”, “மாடக்குளக்கீழ் குலசேகரபுரம்” ன்னு மாடக்குளத்த மையமா வச்சுத்தான் பல ஊருக இருந்திருக்கு. அதுக்கும் மேல இங்க பன்னண்டாம் நூற்றாண்டுல பாண்டியர் கால அரண்மனை இருந்துச்சுன்னும் போனதடவ இங்க வந்தப்ப சாந்தலிங்கம் அய்யா சொன்னத நெனவுபடுத்தி பேசப் பேச 541 படி ஏறிப்போன மலையையும் தாண்டி ஒசக்க ஆகாசத்துல மெதக்குற உணர்வு வந்துச்சு அவனுக்கு. 


அவுக அய்யா சொன்னதோட சிறுவயசுல இருந்து இவன் கவனிச்சிட்டு வர்ற இன்னொரு முக்கியமான சமாச்சாரம் இன்னும் இவுக ஊரு தான் பல பழமையான விசயங்கள இன்னும் பாதுகாத்துக்கிட்டு வருது. எம்.ஜி.ஆருக்கு சண்ட சொல்லிக்கொடுத்தது மாடக்குளத்து ஆளுக தான். இன்னுமும் இங்க சிலம்பாட்டம், சுண்ணாம்பு காளவாச எல்லாம் இருக்கு. குஸ்தி பள்ளிகொடம் இருக்கு. கார்ப்பரேசன் ஆனாலும் இன்னும் ஊர் கட்டுப்பாடு இருக்கு. தண்டோரா போட்டுத் தான் போவாக. கோயில்மாடு இருக்கு. ஊரு பூராவும் சல்லிக்கட்டு மாடு இருக்கு. இன்னும் வெளிய தெரியாம அய்யனார் கோயில்ல கெடா முட்டு நடக்கும், சேவச்சண்ட நடக்கும். மஞ்சத்தண்ணி இருக்கும். பத்து வருசத்துக்கு முன்னாடி கூட பழங்காநத்தத்துல சல்லிக்கட்டு நடந்ததும் அதுல சாரம் போட்டு இவன் வேடிக்கை பாத்ததும், மாடு அணையப் போன இவுக மாமா கால்ல லேசா குத்துப்பட்டதும் நெனப்பு வந்துச்சு அவனுக்கு. இதெல்லாம் இப்போ இங்க வந்தவக ஆச்சர்யமா பேச பேச இவனுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு.


அவங்க ஊருப் பெருமய மதுரை மட்டுமில்லாம, சென்னை, கடலூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, கும்பகோணம், திருச்சின்னு தமிழ் நாடு மட்டுமில்லாம ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியான்னு உலகம் பூராம் இருந்து பல நூத்துக்கணக்கான பேரு வந்து பாத்து வியந்து போனத நெனைக்க நெனைக்க சிலுத்துகிச்சு அவனுக்கு. பசுமைநடை தான் அவனுக்கு அவங்க ஊர்ப் பெருமய புரியவச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு மதுரய குறுக்குவெட்டா காமிச்சுச்சு. பசுமைநடை தான் அவனுக்கு ஒரு சின்ன வட்டத்தத் தாண்டி எல்லைகள கடந்து பல மனுசங்கள அறிமுகப்படுத்துச்சு. அது அவன மாதிரி இன்னும் பல பேருக்கும் எல்லாமுமா இருந்துக்கிட்டுருக்கு. அதோட இயல்பு அப்படித்தான். பசுமைநடை ஆத்துல ஓடுற தண்ணி மாதிரி. சில பேரு அள்ளி குடிப்பாங்க, சில பேரு முங்கி குளிப்பாங்க. சில பேரு கால் மட்டும் நனைப்பாங்க. சில பேரு வேடிக்கை மட்டும் பாப்பாங்க. ஆனா ஆறு எல்லோருக்கும் ஒண்ணு தான்.


எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவன் சின்ன வயசுல பாத்த கம்மாயும், மடையும், மலையுமா இல்ல இப்போ இருக்கது. அவன் வீட்டுல இருந்து தண்டவாளத்து வழி நேரா பாத்தா மலையும், கம்மா கரையும் தெரியும் அவனுக்கு. இப்போ வயக்காடெல்லாம் கட்டடமாகிப் போச்சு. கம்மா கூட கொஞ்சம் சுருங்கிப் போச்சு. கோர வாய்க்கா வயக்காட்டு வரப்பளவு சிறுத்துப் போச்சு. கரும்பு மோட்டரு கார் செட்டாவும், தொட்டி மோட்டரு ரெண்டுமாடி வீடாவும், மாங்கா மோட்டரு அபார்ட்மெண்ட்டாவும் மாறிப்போச்சு. தண்டவாளம் கூட பிராட் கேஜா மாத்துறோம்னு சில வருசத்துக்கு முன்னாடி பேத்து எடுத்து பொதர் மண்டிப்போச்சு. நாம காப்பாத்த வேண்டியதெல்லாம் தொலச்சுட்டு இருக்கோம்னு புரியும் போது ஊருல மிச்சமிருக்கிற வயக்காட்டுலயாவது வெவசாயம் பண்ணனும்னு தோனுச்சு அவனுக்கு. மாடக்குளத்துக்கு குடும்பத்தோட பசுமைநடை போய்ட்டு வந்ததுல இருந்து அவங்க அய்யாவும், அவன் பால்யமும் நெனப்புலேயே இருக்கு அவனுக்கு...


---
பா.உதயக்குமார்...
---
படங்கள் உதவி: அருண் பாஸ், ஆனந்த், விஷ்ணு வர்த்தன், அரவிந்தன்...

முந்தைய பாகங்களைப் படிக்க...



Thursday 7 January 2016

சல்லிக்கட்டு... (Not for the Faint Hearted)...


"Bullfighting is the only Art in which the Artist is in Danger of Death and in which the degree of Brilliance in the performance is left to the Fighter's Honour" - Ernest Hemmingway (1899-1961)

அறிமுகம்:

விளையாட்டு மனிதனின் உடன்பிறப்பு. ஒரு சமூகம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது அச்சமூகம் ஆடிய விளையாட்டு. அது அச்சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டோடு இணைந்தது. அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மாறாக உடல்நலமும் மனநலமும் பேணுவது.


சல்லிக்கட்டு-தமிழகத்தின் வீர விளையாட்டாக அடையாளப் படுத்தப்படுவதின் பின்புலமென்ன? அதன் வரலாறென்ன? மூலமென்ன? குறிப்பாக தென் தமிழகத்தில், அதிலும் மதுரையின் சுற்று வட்டாரங்களில் புகழ் பெற்றதன் ரகசியமென்ன? கொஞ்சம் உற்று நோக்கினால்,

இலக்கியத்தில் சல்லிக்கட்டு:
           
சல்லிக்கட்டு - ஏறுதழுவல் என்ற பெயர் தாங்கி சங்க இலக்கியங்களின் அகநூல்களில் ஒன்றான கலித்தொகையில், அதிலும் குறிப்பாக சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக்கலியில் பாடப்பட்டுள்ளது.  ஏறு தழுவல்-விடை தழால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

           
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் பெண் காளை வளர்ப்பதையும், காளை அடக்குபவனை பெண் விரும்பியதையும் காண முடிகிறது. அதுசரி ஏன் காளை அடக்குபவனை பெண் விரும்ப வேண்டும்?

வரலாறு:


மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து காட்டுமிராண்டி நிலையிலிருந்து விலங்குகளை பழக்க ஆரம்பித்த காலத்தில் அவன் நாகரிகத்தின் முதல் படியை அடைந்தான். அதுவரை தனது உணவுத்தேவைக்கு அலைந்து திரிந்தவன் நிலையான வாழ்க்கைமுறைக்குத் தள்ளப்பட்டான்.இந்த நிலையான வாழ்வில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இனமாக வாழ ஆரம்பித்தான். தினைக்குடிகளும் ஊர்களும் தோன்றின. கால்நடைகளின் பெருக்கம் உணவுத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்ததுடன் மனிதனை புதிய வாழ்க்கைமுறைக்கு உந்தியது. பரிவர்த்தனையின் முக்கியப் பொருளாக கால்நடைகள் மாறின.


மாடு என்றால் செல்வம் என்று பொருள். இன்றளவிலும் நாம் பசு, எருது, எருமை உள்ளிட்டவைகளை மாடு என்றே அழைக்கிறோம். விவசாயம் தோன்றியது. விவசாயம் செய்பவர்கள் தனி இனக்குழுவாகவும், கால்நடைகளை மேய்ப்பவர்கள் தனி இனக்குழுவாகவும் பிரிந்தனர் (முதல் தொழிற் பிரிவினை). இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  விவசாயம் பெருக்கப்பட்டது. நிலங்களையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு வலிமை மிகுந்த அல்லது வயதில் மூத்த ஒருவர் இனக்குழுத் தலைவர் ஆக்கப்பட்டார். கால்நடைகளை வழி நடத்த பயன்பட்ட கோல் இனக்குழுத் தலைவன் மக்களை காக்க பயன்படுத்தும் செங்கோலாக மாறியது.

விவசாயப் பெருக்கம், கால்நடைகளின் பெருக்கத்தால் கிடைத்த உபரிப் பொருள் திறை என்ற பெயரில் வழங்கப்பட்டது. இங்கு அரசு உருவாகியது. எல்லோரிடமும் திறை வாங்கியதால் செல்வந்தன் ஆனவன் அதிகாரம் கொண்டான். அருகில் வாழ்ந்த இனக்குழுவின் கால்நடைகளை, விவசாய நிலங்களை கைப் பற்றினான்.


இதனால் காவல்-காவலர்கள்-அரசு என்ற நிலைத்த அமைப்பு உருவானது. காவலர்கள் வீரர்கள் ஆனார்கள். போர்கள் தோன்றின. வீரம் போற்றப்பட்டது. போரின் தொடக்கமாக இனக்குழுவின் செல்வமாக கருதப்பட்ட ஆநிரைகள்  கவரப்பட்டன. ஏறு தழுவலின் ஆரம்பமும் இதுவே.

குறிஞ்சி-மேடு பள்ளம், மருதம்-விளைநிலம், நெய்தல்/பாலை-மணற்பகுதி, முல்லை-காடும் காடு சார்ந்த சமவெளிப்பகுதி. அதனால் முல்லை நிலமே அரசு தோன்றவும், மேய்ச்சல் நிலமாகவும், ஏறுதழுவல் களமாகவும் அமைந்தது. ஏறுதழுவல் முல்லை நிலத்து ஆயர்களிடம் தோன்றி பின்பு மருத நிலத்து உழவர்களிடமும் பரவி செல்வாக்குப்பெற்றது.

சல்லிக்கட்டும் வீரமும்:

மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பழக்குவதற்கும் மாடுகளை அடக்கி வெற்றிகொள்ள வேண்டியது அவசியமானது, நிலையான சமூக அமைப்பு தோன்றிய பின்னர் ஏறுதழுவல் விளையாட்டாக மாறியது. மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போதோ, தொழுவில் முரண்டு பிடிக்கும் போதோ, அடங்க மறுத்து திமிரும் போதோ அதை அடக்கி வசப்படுத்த வேண்டியது அவசியம். எனவே மாடுகளை அடக்கக் கூடிய வீரம் பொருந்திய ஆண் மகனே தன்னுடைய குலப் பெருமையை காக்கும் பெண்ணை திருமணம் செய்யத் தகுதியானவன் என்ற எண்ணம் இவ்விளையாட்டை வலுப்படுத்தியது. பெண் குழந்தை பிறந்த உடனே ஒரு காளையையும் சேர்த்தே வளர்க்கப் பட்டது. பெண்கள் காளைகளை வளர்த்தனர். அதனை அடக்குபவனை தங்கள் வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுத்தனர்.


ஆரம்ப காலத்தில் பெண் வளமையின் குறியீடு. பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. பொன், பொருள் பரிசாகத் தரவேண்டும். பெண்ணை அடைவதற்கு ஏற்படும் போட்டியில் உயிர் கூட போகலாம்.  பிறகு மெல்ல பெண்களின் உரிமையை பறிக்கும் பொருட்டு ஆண்கள் அவர்களிடமிருந்த காளைகளை வெற்றி கொண்டனர். காலப்போக்கில் காளைகளை அடக்குவது பெண்களை அடக்கும் செயலின் அகவடிவச் செயலாக மடைமாற்றமடைந்தது. பின்னாட்களில் பெண் வெற்றி கொள்ளப் படவேண்டியவள், காளைகளை அடக்குதல் வீரம் அதற்கு பெண் பரிசுப்பொருள் என்று மறுவடிவம் கொண்டது.


இவ்வாறு ஏறுதழுவல் பெண்களை மனம் முடிக்க வீரத்தை நிருபிக்கும் விளையாட்டாக இருந்தது நாளடைவில் அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களினால் வீரத்தை நிருபித்து பெண்ணைத் தவிர வேறு பரிசுப் பொருள்கள் பெறும் முறையாய் மாறியது. ஏனெனில் முன்பெல்லாம் முறையுள்ள மாமன்மார்கள் மட்டுமே குறிப்பிட்ட காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு அழகத் தேவன் கதைப் பாடலில் வரும்,

" கெழக்கே பிறந்த காளை 
கீழக்குடி ஓய்யம்மா காளை 
வேட்டி வச்ச ஆம்பள சிங்கம் 
அங்காளி பங்காளி 
அண்ணன் தம்பி யாரும் நிக்காதீங்க,
மொறையுள்ள மச்ச்சான்மார்கள் 
யாராக இருந்திட்டாலும் 
ஏழு காளை புடிச்சவங்க 
என்னைத் தாலி கட்டிகங்க"

என்ற வரிகள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது அப்படியில்லை. எல்லோரும் மாடு பிடிக்க அனுமதிக்கப் பட்டபிறகு கீழ்சாதியில் ஒருவன் மேல்சாதிப் பெண் வளர்த்த காளையை பிடிக்கும் போதும், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் பிடிக்கும் போதும் இவ்வழக்கம் தடை பட்டிருக்கலாம். எனவே பெண்ணை திருமணம் செய்தல் மறைந்து வெறும் பரிசுப் பொருளோடு நின்ற பிறகு சல்லிக்கட்டு என பெயர் பெற்றிருக்கலாம்.

சல்லிக்கட்டு-பெயர்க்காரணம்:

சல்லிக்கட்டு- "சல்லி" என்றால் சிறிய காசு (சல்லிகாசுக்கு பிரயோஜனமில்லை என்று தற்போதும் கூறுகிறோம்) அல்லது ஆபரணத் தொங்கல் என்று பொருள். திருமனத்தைக் குறித்து நடத்தப்பட்ட ஏறுதழுவல் பரிசுப் போட்டியாக மாறிய சூழலில் பரிசாக பணம் வழங்கப்பட்டதாலும், காளைகளின் கழுத்தில் ஆபரணம் அணியப்பட்டதாலும் சல்லிக்கட்டு என பெயர் பெற்றிருக்கலாம்.


சல்லிக்கட்டு தற்போது சமய விழாவாக நடத்தப் படுகிறது. சங்க காலத்தில் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் அந்த நம்பிக்கைக்கு ஆதரவு குறைந்தது. அதே வேளையில் துடியான தங்களது கிராம தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுக்க வேண்டும் என்ற விழைவும் சல்லிக்கட்டு போன்ற உயிர்பலி, இரத்தப் பலி நேர்கின்ற விளையாட்டு சமயத்தோடு இணைக்கப் பட்டிருக்கலாம்.

சல்லிக்கட்டும் மதுரையும்:

சல்லிக்கட்டு பல இடங்களில் விளையாடப்பட்டாலும் மதுரை மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் சிறப்பாக ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வருகிறது. இதற்கு மதுரையின் நில அமைப்பே முக்கிய காரணம். முன்பே சொன்னது போல் சல்லிக்கட்டு/ஏறு தழுவல் முல்லை நிலத்தில் தோன்றி வலுப் பெற்றது. சோழநாடு-மருதவளம் நிறைந்தது, சேரநாடு-மலைவளம் சிறந்தது. எனவே முல்லைவளமுடைய பாண்டிய நாடாகிய மதுரைப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது.

சாதி மறந்த சல்லிக்கட்டு:

பண்பாட்டின் அடையாளமாக, விளையாட்டின் தீவிரத்தில் சாதியை விட்டொழித்து எல்லா சாதியினரும், மதத்தினரும் கலந்துகொள்வதொடு நடத்தவும் முடிகிற தமிழர்களின் வீர விளையாட்டாய் நிலைபெற்றிருக்கிறது சல்லிக்கட்டு. உதாரணமாக அலங்காநல்லூரில் நாயக்கர்கள், கோனார்கள், முக்குலத்தோர்கள் இணைந்து சல்லிக்கட்டை நடத்தினால், அதனினும் பிரமாண்டமாக பாலமேட்டில் "தேவேந்திர குல வேளாளர்கள் (பள்ளர்)" சல்லிக்கட்டை வருடாவருடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் சாலையோரங்களில் விற்கப்படும் மாட்டுக்கறி (பீப்) பிரியாணி மற்றும் பன்னிக்கறி வெகு பிரபலம். பொங்கலுக்கு கரும்புக் கடைகளைப் போல அதிகளவில் இந்த பீப் பிரியாணி மற்றும் பன்னிக்கறி கடைகள் கடைகள் போடப்பட்டிருக்கும். மாடுகளைப் போற்றும் மாட்டுப்பொங்கல் நாளில் மாட்டுக்கறி பிரியாணி விற்கும், உண்ணும் வழக்கம் இருப்பதில் புரிந்துகொள்ள முடிகிறது அதன் பண்பாட்டு அளவியலை. இந்தக் கட்டுரையின் மூலம் நாம் சல்லிக்கட்டின் வரலாற்றை மட்டுமல்ல, விவசாயத்தின் அடிப்படையில் உருவான இனக்குழு வரலாற்றையும், தொழிற் பிரிவினையையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர்/திராவிட நாகரிகங்களில் தொழிற் பிரிவினையை இருந்தது பின்னாட்களில் சாதியமாக கட்டமைக்கப்பட்டது.

சல்லிக்கட்டு ஏன் வேண்டும்?


தற்போது சல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமாக நமது பண்பாட்டின் எச்சமாக விளங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது, ஆனால் வழக்கத்தில் மாடுகளை அணைவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தூரம் வரை மாடுகளைத் தொட்டுக்கொண்டே சென்றாலே வீரமாக அடையாளப்படுத்தப் படுகிறது. எது எப்படியோ நமது வரலாற்றுத் தொன்மையை கொஞ்சம் கொஞ்சமாகவும், சில வேலைகளில் மொத்தமாகவும் இழந்து கொண்டிருக்கும் நாம் தொக்கி நிற்கும் ஒன்றிரண்டு எச்சங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். சல்லிக்கட்டில் மாடுகளை அணைபவர்களுக்கு பணம், பரிசுப் பொருள் என மாற்றமடைந்த பிறகு அதில் எல்லா சாதியினரும் இப்போது கலந்து கொள்கின்றனர், எல்லா சாதியினரும் அதை ஏற்று நடத்துகின்றனர். இவ்வளவு பெரிய வரலாற்றுப் பெருமையை தன்னோடு சுமந்திருக்கும் இவ்விளையாட்டு தற்போது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தோடே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் படுகிறது.


விலங்கு நல ஆர்வலர்கள் முன் வைக்கும் விவாதம் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன என்பது தான். இதுவரை சல்லிக்கட்டு வரலாற்றில் எந்த ஒரு மாடும் களத்தில் இறந்ததாய் தகவல் இல்லை. மாறாக வீரர்களே இறந்திருக்கின்றனர். காயம்பட்டிருக்கின்றனர். சல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் அவ்வளவு சுலபமில்லை. காளையை வெயில் படாமல், தான் உண்ணா விட்டாலும் அதற்கு ஊட்டமளித்து, அதைப் பராமரிக்கவே தனியாக ஆட்களை நியமித்து, உயிருக்குயிராய் நேசித்து அணு அணுவாய் அந்தக் காளையை தயார் செய்கின்றனர்.


சல்லிக்கட்டு பணம் புரளும் விளையாட்டும் அல்ல. இதில் வெற்றி கொள்வோருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் கட்டில், பீரோ, பிளாஸ்டிக் சேர், சைக்கிள், வெள்ளிக் காசு. ஒரு கிராம் தங்கக் காசு ஆகியவை மட்டுமே. ஒரு காளையை வளர்த்து சல்லிக்கட்டுக்கு அதைத் தயார் செய்வதற்கும், அதை சல்லிக்கட்டு நடக்குமிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் செலவிடப்படுப்படும் தொகை அதை விட 100 மடங்கு அதிகம்.
           

பிறகு எது சல்லிக்கட்டை நோக்கி நம்மை உந்துகிறது? மான உணர்வு, வீர உணர்வு, பண்பாட்டு உணர்வு, சமய உணர்வு... சல்லிக்கட்டு நமது பண்பாட்டு அடையாளம். வேறு எந்த விளையாட்டிற்கும் இவ்வளவு நீண்ட பண்பாட்டு அடையாளம் இல்லை. வேறு எந்த இனக் குழுவிற்கும் பண்பாட்டோடு இணைந்த இப்படிப்பட்ட விளையாட்டுக்கள் இல்லை. நமது பண்பாட்டு அடையாளங்களை காப்பதோடு அதனை மேலும் வீரியமாக முன்னெடுக்கும்போது நமது அடையாளம் அழிவிலிருந்து காக்கப்படும். இல்லையெனில் பொங்கலை மட்டும் கொண்டாடிக்கொண்டிருந்த நாம் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போகியில் நமது அடையாளங்களை பழமையை கழித்து, எரிக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இழந்ததைப் போல மிச்சமிருக்கும் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். நாம் விவாதத்தில் வைத்திருப்பது நமது பண்பாட்டை... சிந்தியுங்கள்...

 பா.உதயக்குமார்...


நன்றி:
திரு.பா.ஆசைத்தம்பி,
தொல்லியல்துறை,
மதுரை.

படங்கள்: ஆகாஷ் அருண் - புதுடெல்லி,
                    அருண்பாஸ் - மதுரை,
                    குணா அமுதன் - மதுரை,
                    KK சுந்தர் - மதுரை.