Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Thursday, 9 January 2014

யானைமலையில் பசுமைநடை (29)...


என்ன மாப்ள 2-3 நாளா உன் போன் ரீச் ஆகல?

ஆமா மாப்ள, புனே போயிருந்தேன்டா அதான் சுவிட்ச் ஆப் பண்ணிருந்தேன், ஏன்டா?

வேற ஒண்ணுமில்லை, போன ஞாயித்துக்கிழமை உங்க ஏரியாவுக்கு வந்திருந்தோம் அதான்.

வந்திருந்தோமா? யார்யாரெல்லாம்? எதுவும் முக்கியமான விசயமா?

இல்ல மாப்ள, சும்மா தான் கிரீன் வாக்ல இருந்து யானைமலைக்கு வந்திருந்தோம். சரி நீ வீட்ல இருந்தா உன்னையும் வர சொல்லலாம்னு தான்.


கிரீன் வாக்னா இந்த மலை மலையா போவிங்களே அதான? இந்த வாட்டி யானைமலையாக்கும்? உங்களுக்கு யானைமலையைப் தெரியுமா?

எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும். உனக்கு முழுசா தெரியுமா?

ஏன் தெரியாம? எங்களுக்கு இந்த மலையே சாமிடா. இங்க நரசிங்கப்பெருமாளுக்கு குடைவரை கோயில் இருக்கு. ரொம்ப பழமையான கோயில்.


வேற என்ன தெரியும்?

வேற என்ன இருக்கு?

இந்த மலையில சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? லாடன் கோயில் இருக்கு தெரியுமா?


ஆமா, மலை மேல கொஞ்ச தூரத்துல கல்வெட்டுலாம் இருக்கு. ஏதோ பஞ்ச பாண்டவர், முனிவர்லாம் இருந்த இடம்னு சொல்லுவாங்க. அதென்ன சமணர் படுக்கை? லாடன் கோயில்?

அது என்னன்னு சொல்றேன். கல்வெட்டுலாம் இருக்குனு சொன்னியே அதுல என்ன எழுதிருக்குனு தெரியுமா?

கல்வெட்டு இருக்குனு தான் தெரியும். அதுல என்ன இருக்குனு தெரியாது.

ஆனா எனக்கு தெரியும். இந்த மலையைப் பத்தி உனக்கு தெரியாததெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு மட்டுமில்ல, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், விருது நகர், ராமநாதபுரம், வத்ராப் அப்புறம் மதுரைக்குள்ளயே  அங்க இங்கனு  கிட்டத்தட்ட இப்போ 250  பேருக்கும் அதிகமானவங்களுக்கு தெரியும்.


என்னடா சொல்ற? எங்க ஊரைப்பத்தி எனக்கே தெரியாததெல்லாம் எங்கெங்கயோ இருந்து வந்து தெரிஞ்சுட்டு போயிருக்காங்க. நீ சொல்லும்போது எனக்கே வெக்கமா இருக்கு மாப்ள. தயவுசெஞ்சு கொஞ்சம் அதபத்தி சொல்லுடா, நானும் தெரிஞ்சுக்குறேன்...

ஹா ஹா. சொல்றேன் மாப்ள. உங்க ஊரு பேரு மொதல்ல, அதாவது 9-10 நூற்றாண்டுல நரசிங்கமங்கலம், இப்போ தான் அது நரசிங்கம்னு சுருங்கிடுச்சு. நான் சொல்லல, கல்வெட்டு சொல்லுது. இந்த மலையோட உயரம் 90 மீட்டர், அகலம் 1200 மீட்டர்,  நீளம் 4000 மீட்டர்.  



நாம நிக்கிறதுக்கு நேரா தும்பிக்கை மாதிரி தெரியுது பாரு அங்க ஒரு இடத்துல இயற்கையாவே சின்ன குகை மாதிரி இருக்கும். அங்க கொஞ்சம் சமணர் படுக்கைகளும், ஒரு தமிழ் பிராமி கல்வெட்டும் இருக்கு. சமணர் படுக்கைனா என்னன்னா, மதுரையை சுத்தி இருக்கிற அதிகமா ஆள் நடமாட்டமில்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற மலைகள்ல யார் தொந்தரவும் இல்லாம இருக்கனும்ங்கறதுக்காக சமணத் துறவிங்க வந்து தங்கினாங்க. அவங்க தங்குறதுக்கு வசதியா கல்லுலயே படுக்கை மாதிரி வெட்டி குடுப்பாங்க, அதான்.



யானைமலையில அந்த இடத்துக்கு போறதுக்கு நரசிங்கம் மெயின் ரோட்ல போலீஸ் ஸ்டேஷன் தாண்டுனதும் வலது பக்கம் ஒரு சந்து மாதிரி போகுதுல, உனக்கு தான் தெரியுமே அந்த வழியாத் தான் போகணும். 



ஆனா மேல கொஞ்சம் சிரமப்பட்டு தான் மாப்ள ஏறனும். கொங்சதூரம் படி இருக்கு, அப்புறம் ஒரு இடத்துல இரும்புட்ட படி போட்ருக்காங்க. அதத் தாண்டி போனா தான் நான் சொல்ற படுக்கைகளும், கல்வெட்டும் வரும்.



அந்த கல்வெட்டுல என்ன போட்ருக்குனா,
“இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
அப்டின்னு போட்ருக்கு. இதுல இவம் அப்டினா சமஸ்கிருதத்துலயும், பிராகிருதத்துலயும் யானைன்னு அர்த்தம். அதாவது 2000 வருசத்துக்கு முன்னாடியே இதுக்கு யானைமலைன்னு பேர் இருந்திருக்கு. உறையுள் அப்டினா தங்குமிடம், பாதந்தான் அப்டினா பாய் அல்லது படுக்கை. அதையே பதந்தன்ன்னு வாசிச்சா மரியாதைக்குரியவர்னு அர்த்தம். அட்டவாயி/அத்துவாயின்னா சொற்பொழிவாளர்ன்னு அர்த்தம். காயிபனை காஸ்யபன்ற கோத்திர பேராகவும் அர்த்தப்படுத்திக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா ஏரி அரிதன் மற்றும் அத்துவாயி அரட்டகாயிபன்ங்கிற ரெண்டு சமணத்துறவிகளுக்காக யானைமலையில வெட்டிக்குடுத்த படுக்கை அப்டின்னு அர்த்தம்.


மாப்ள, இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? இத்தனை நாள் எனக்கு தெரியாமப் போச்சே மாப்ள. சரி மலைமேல ஒரு யானைக்கண்ணீர் ஊற்று இருக்கே? போனிங்களா?


அது தெரியும் மாப்ள. ஆனா இந்த தடவ போகல. இன்னொரு நாளைக்கு மலைக்கு மேல நடக்கனும்னு சொல்லிருக்காங்க. அன்னைக்கு போவோம்.
மாப்ள, அப்புறம் நரசிங்கம் கோயிலுக்கு போற வழியில நிறைய சமண சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் இருக்கு. அதையெல்லாம் இந்த தடவ பாக்கல. ஏற்கனவே அங்க போய்ட்டு வந்துட்டோம். ஆனாலும், புதுசா வந்தவங்களுக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தோட ஹிஸ்டரி ப்ரொபசர் கண்ணன் சார் கொஞ்சம் சொன்னாரு.



நரசிங்கபெருமாள் கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி வலது பக்கம் திரும்பி போனா 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், அப்புறம் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி சிலைகள் இருக்கு. அதுக்கு மேலயெல்லாம் சுண்ணாம்பு பூசி அழகழகா கலர்ல ஓவியம் வரைஞ்சிருக்காங்க. அது சித்தன்ன வாசல் ஓவியம் வரைஞ்ச காலகட்டத்தை சேர்ந்ததுன்னு சொன்னாரு. யோகநரசிம்மர் கோயிலும், லாடன் கோயிலும் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாம்.



பாத்தியா உங்க ஊரு மலை எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு. இப்பிடிப்பட்ட மலையைத் தான் சிற்ப நகரா மாத்தணும்னு முயற்சி பண்ணாங்க. அப்போ ஆரம்பிச்சது தான் பசுமை நடை. அதுனால இந்த மலை பசுமைநடையோட வரலாற்றுலயும் இடம் பிடிச்சுருச்சு.


அப்டியா மாப்ள. நான் கூட எங்க மலைய உடைக்கக்கூடாதுன்னு பயலுகளோட சேந்து ரோட்ட மரிச்சேன் மாப்ள. சரி மாப்ள, யாரு வேணாலும் பசுமை நடைக்கு வரலாமா? எப்போலாம் போவிங்க? சேரணும்னா என்ன பண்ணனும்?


யாரு வேணாலும் சேரலாம் மாப்ள. ஒவ்வொரு மாசமும் ஏதாவதொரு ஞயிற்றுக்கிழமை அன்னைக்கு காலைல வெள்ளன 6 மணிக்கெல்லாம் போய்ட்டு 9-10 மணிவாக்குல முடிச்சு திரும்பிடுவோம். இத SMS / Face Book மூலமா தான் ஒருங்கிணைக்கிறோம். இதுல சேரணும்னா 97897 30105 ன்ற நம்பரை தொடர்பு கொண்டா போதும். Face Book ல போய் Green Walk ன்ற பேஜ் பாரு மாப்ள.

அ.முத்துக்கிருஷ்ணன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார்ல?


ஆமா, இந்த விஜய் டிவில எல்லாம் வருவாரே, நீயா நானவுல?

அவரே தான். அவரு தான் இத மொத மொதல்ல ஆரம்பிச்சாரு. அப்புறம் அவரோட நண்பர்கள், பொது மக்கள்னு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 800 பேர் வரை பசுமைநடையில உறுப்பினர் ஆகிருக்காங்க மாப்ள. இந்த தடவ கூட 250 பேர் வந்துட்டாங்க. அதான் ஏற்கனவே சொன்னேன்ல?


யே யாத்தே! அம்புட்டு பெரும் காலங்காத்தால எந்திரிச்சு வந்துர்றாங்களா மாப்ள? அதுவும் வெளியூர்கள்ல இருந்தெல்லாம் வர்றாங்கன்னு வேற சொல்ற?

அதெல்லாம் ஒவ்வொரு தடவையும் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது மாப்ள. இதுல அவ்வளவு பேருக்கும் காலை சாப்பாடு வேற தர்றோம் மாப்ள. அதுவும் கட்டணமில்லாம. ஆனா யாராவது தானா முன்வந்து ஏதாவது குடுத்தா வாங்கிக்குவோம்.

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் மாப்ள. பசுமைநடைக்கு கும்பகோணத்துல இருந்து முருகராஜ்னு ஒரு நண்பர் வர்றாரு. அவரும் அவரு நண்பர்களும் சேந்து சஞ்சிகைனு ஒரு சின்ன பத்திரிகை நடத்துறாங்க. அதுல பசுமைநடையைப் பத்தி தொடர்ச்சியா பதிவுபண்றாங்க. நான் கூட கட்டுரை எழுதிருக்கேன். இந்த மாசத்தோட சஞ்சிகை இதழ அங்கன மலை மேலேயே வச்சு வெளியிட்டாப்ள. வந்தவங்களுக்கும் அதுல ஒரு சந்தோசம்.


பரவாயில்லையே மாப்ள. யானைமலை சிற்பநகரா மாத்துனப்ப ஆரம்பிச்சதுன்னு சொல்ற? அப்டினா கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கு மேல ஆச்சே. இவ்ளோ நாளு இத கட்டணமில்லாம நடத்துறதே பெரிய விஷயம் தான் மாப்ள. உண்மையிலேயே எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டணும். எனக்கும் இப்போ ஆர்வமாயிடுச்சு மாப்ள. அடுத்த மாசத்துல இருந்து நானும் வர்றேன். அதுக்கு முன்னாடி யானைமலையை பயலுகளோட ஒரு வாட்டி சுத்திப்பாக்கப் போறேன். நிறைய விசையம் சொல்லிருக்க. ரொம்ப நன்றி மாப்ள.

சரி மாப்ள. நீ பாத்துட்டு வா. நாம அடுத்த நடையில அதப்பத்தி பேசலாம். அடுத்த நடை மேலக்குயில்குடிக்கு போறோம், ஜனவரி 26 ம் தேதி. அங்க சந்திப்போம். பாய்.


- உதயக்குமார் பாலகிருஷ்ணன்... 

ஒளிப்படங்கள்:

அருண் பாஸ், எப் ஜெய், மதுமலரன், ஷாஜகான், சுந்தர், P.G.சரவணன்...

Saturday, 2 November 2013

பசுமைநடையில் நான்...

கொங்கர்புளியங்குளம் – எனக்கும் பசுமைநடைக்குமான தொடர்பின் ஆரம்பப்புள்ளி. இதுவரையில் 27 நடை கண்டிருக்கும் பசுமைநடையின் நாலாவது நடை, எனது முதல் நடை, இப்போது மீண்டும் 27 ஆவது நடை (20/10/2013) கொங்கர் புளியங்குளம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலிருக்கும் கொங்கர் புளியங்குளம் மலைக்கும் எனக்குமான தொடர்பு பசுமைநடை தாண்டியும் கொஞ்சம் இரசம் மிக்கது. ஆம் இங்கு ஒரு சாதாரணமான சூழலில் அப்போது நான் வைத்திருந்த நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் செல்போனில் நான் எடுத்துக்கொண்ட ஒரு சாதரணமான புகைப்படமே இதுவரையில் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிடித்த புகைப்படமாக உள்ளது.
கொங்கர் புளியங்குளத்தில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

அப்படி அது சொல்லிக்கொள்ளுமளவிற்கு சிறப்பான புகைப்படம் இல்லையெனினும் ஒரு சிறப்பான தகுதியை எட்டிவிட்டது. இப்படி அச்சுபிச்சு காரணங்களோடே இம்மலைக்கும் எனக்குமான இரசவாதம் கொஞ்சம் அலாதியானது. இம்முறை கொங்கர் புளியங்குளம் என்னை எழுதத் தூண்டியது பசுமைநடையில் எனது சுயபுராணத்தை.

முதன்முதலில் பசுமநடை பற்றி நான் அறிந்தது முகநூல் வாயிலாக. அப்போது தான் காவல்கோட்டம் நாவலை வாசித்து முடித்திருந்த நேரமென்பதால் எனக்கு இம்மலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் – ஞாயிறன்று அதிகாலை 6:30 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் கூட வேண்டுமென முகநூலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நான், உடன் தம்பி சந்தோசோடு 6.30 மணிக்கு அங்கிங்கு விசாரித்து நேரே மலைக்கே சென்றுவிட்டேன். ஆனால் சொன்ன நேரத்தில் யாரும் அங்கு இல்லாதது கண்டு இருவருமே ஏமாற்றமடைந்தாலும், அதிகாலை வேலையில் தூக்கம் கெடுத்து, எங்களின் ஆர்வம் கெடுத்து ஏமாற்றத்தின் வடு உள்ளிருக்க இருவருமே ஏதேதோ சமாதானம் சொல்லி தேற்றிக்கொண்டோம். பிறகு வந்த கையோடு திரும்பிச் செல்லாமல் நாமாக சுற்றிப் பார்க்கலாமென முடிவெடுத்து சுற்றிமுடித்த கையோடு அந்த அதிகாலை நேரம் மலை எங்களுக்குள் ஏற்படுத்திய பரவசமும், அந்த ரம்மியமான சூழலும் தந்த மிதப்பில் அங்கேயே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து வர எங்களுக்குள் பழைய உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலிருந்து கையசைத்தவாறே உற்சாகம் தாளாது கீழிறங்கி வந்து கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். பிறகு நேரே எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் சென்று  அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்வமிகுதியில் “நீங்க ரொம்ப லேட் சார், நாங்க இங்க 6.30 க்கெல்லாம் வந்துட்டோம்” என்க, அவர் எங்களிடம் 6.30 மணிக்கு நாங்கள் வரச் சொன்ன இடம் பல்கலை வாயில் என பதிலுரைக்க, ஹி ஹி என அசடு வழிந்துகொண்டே பேசிச் சென்றோம். பிறகு அவர் இதை நாங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே ஒருங்கிணைக்கிறோம் என்றுகூற எனது எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு நிகழ்வில் ஒன்றிணைந்தேன். பேராசிரியர் சுந்தர்காளி இடங்களின் சிறப்பை விளக்க அதன்பிறகு எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. தம்பி சந்தோசிடம் நான், “தம்பி நாம இங்க ஒரு வேலை கூட செய்யாம சோறு சாப்பிட்டா நமக்கு உடம்புல ஒட்டாதுடா. அதனால எல்லோருக்கும் பரிமாறிட்டு கடைசியா நாம சாப்பிடுவோம்” எனக்கூறி ஏதேனுமொரு வகையில் நமது பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற முனைப்புடன் தன்னார்வமாக வேலை செய்தோம்.

அங்கேயே அடுத்தநடை மாங்குளம் என அறிவிக்க, நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் மாங்குளத்தில் எனது நண்பர்கள் உள்ளனர், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். இங்கு எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு முன்புவரை அவருடனான எனது அறிமுகம் அவரை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்தது மட்டுமே. பிரபலங்கள் எல்லோரும் தனித்தே இருப்பார்கள் என்று மற்றவர்களைப் போலவே எனக்கும் எண்ணமுண்டு. ஆனால் இவர் விதிவிலக்கானவர். அவருடன் பழகிய பிறகே தெரிந்தது அவரது எழுத்துக்கள் அனைத்தும் மக்களுக்கானவை. மக்களின் தேவைகளை, உணர்வுகளை, வலிகளை, உண்மைகளை பிரதிபலிப்பவை. மக்களிடமிருந்து தனித்திருந்தால் மக்களுக்கான எழுத்து எப்படி உருவாகும்? இவர் சமூகவெளியில் எப்போதும் சகமனிதனாக பயணிப்பதையே விரும்பும் ஒரு சாதாரணன். சாதாரணர்களுக்காகவே எழுதும் சாமானியன். அந்த நிகழ்விற்குப் பிறகு அவர் என்னை ஞாபகம் வைத்து அழைப்பாரென நான் நினைக்கவேயில்லை. அவர் அழைத்ததன் நோக்கம் மாங்குளம் சென்று அடுத்த நடைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு. ஒரு நடை நடத்துவதில் உள்ள சிரமம், அதற்கான முன்தயாரிப்புகள், நேர்த்தி என ஒவ்வொன்றும் ஒரு நிர்வாகம் பயிலும் மாணவனுக்கும், அத்துறையிலிருப்பவர்களுக்குமான படிப்பினை. அதன்பிறகு ஒவ்வொரு நடையிலும் என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டதை கேட்கவும் வேண்டுமா?

இயல்பில் சமூகப்பணி படித்த எனக்கு பசுமைநடை கற்பித்த பாடம், ஒரு தன்னார்வமிக்க சமூகத்தை எப்படி கட்டமைக்க வேண்டுமென்பது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், இன, மத, சாதி, வகுப்புகளைச் சேர்ந்தவர்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது பசுமைநடை. இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கமிருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒரே தளத்தில், தங்களது சுய அடையாளங்களை விடுத்து பசுமநடையின் உறுப்பினர்களாக மட்டுமே இயங்குவதென்பது சாதரணமாக சாத்தியமாகிவிடக்கூடிய ஒன்றில்லை. இங்கு கிடைக்கும் மரியாதையும், அங்கீகாரமும் வயது முதிர்வினாலோ, தங்கள் துறையில் வித்தகர்களாக இருப்பதினாலோ, பெரும்பொருள் படைத்தவர்கள் என்பதினாலோ, சமூகத்தில் பெரும்புள்ளிகள் என்பதினாலோ அல்ல. முற்றாக தன்னார்வமான உழைப்பினால் மட்டுமே கிடைக்கப்பெறுவது. உழைக்கும் எவரையும், எப்போதும், இங்கு எல்லோரும், வணங்கத் தயார். எந்தவித பொருட் பிண்ணனியும் இல்லாது துணிந்து ஒரு விருட்சத் திருவிழா நடத்தியது முழுவதுமாக இந்த தன்னார்வமான உழைப்பை நம்பியும், எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனின் தீர்க்கமான பார்வையின் உந்துதலினாலும் மட்டுமே.

இப்படி கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்கும் பசுமைநடை, சமூகவெளியில் செயல்படும் அனைவருக்குமான பால பாடம் அல்ல பட்ட மேற்படிப்பு.

Saturday, 28 September 2013

மதுரை...

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை...

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை...

மல்லிகை மௌவ்வல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாடிய மாடிய பதிமதுரை...

தொன்னவன் நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை...

தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டு
அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை...

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரள் என்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை...

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நியரில்சில கண்ணியரும்
ஆட்சிபுரிந்த தென்மதுரை -
மீனாட்சியினால் இது பெண்மதுரை...

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை...

அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழனின் தலைமதுரை...

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை...

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஒசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வலையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும் தொழில்மதுரை...

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியத்தில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை...

நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பாட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை...

- கவிப்பேரரசு வைரமுத்து...        

Monday, 16 September 2013

வணக்கம்...

மீனாட்சி பட்டணம் -


தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராம் மதுரையின் கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் தேடிச் சென்று தொகுக்கும் ஒரு சாதாரணனின் முயற்சி... 

நமது பழக்கவழக்கங்கள், சடங்குகள் என கூடுமானவரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சி. "மதுரையைச் சுற்றிய கழுதையும் வேற ஊர் தங்காது" என்றொரு சொலவடை உண்டு. இது மதுரையைச் சுற்றும் கழுதையின் அனுபவம். மதுரையை சுற்ற விரும்பும் கழுதைகளுக்கான களம்...

தங்களது மேலான ஆதரவுகளுடன்...

பா.உதயக்குமார்...