Showing posts with label kongarpuliyangulam. Show all posts
Showing posts with label kongarpuliyangulam. Show all posts

Saturday, 2 November 2013

பசுமைநடையில் நான்...

கொங்கர்புளியங்குளம் – எனக்கும் பசுமைநடைக்குமான தொடர்பின் ஆரம்பப்புள்ளி. இதுவரையில் 27 நடை கண்டிருக்கும் பசுமைநடையின் நாலாவது நடை, எனது முதல் நடை, இப்போது மீண்டும் 27 ஆவது நடை (20/10/2013) கொங்கர் புளியங்குளம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலிருக்கும் கொங்கர் புளியங்குளம் மலைக்கும் எனக்குமான தொடர்பு பசுமைநடை தாண்டியும் கொஞ்சம் இரசம் மிக்கது. ஆம் இங்கு ஒரு சாதாரணமான சூழலில் அப்போது நான் வைத்திருந்த நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் செல்போனில் நான் எடுத்துக்கொண்ட ஒரு சாதரணமான புகைப்படமே இதுவரையில் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிடித்த புகைப்படமாக உள்ளது.
கொங்கர் புளியங்குளத்தில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

அப்படி அது சொல்லிக்கொள்ளுமளவிற்கு சிறப்பான புகைப்படம் இல்லையெனினும் ஒரு சிறப்பான தகுதியை எட்டிவிட்டது. இப்படி அச்சுபிச்சு காரணங்களோடே இம்மலைக்கும் எனக்குமான இரசவாதம் கொஞ்சம் அலாதியானது. இம்முறை கொங்கர் புளியங்குளம் என்னை எழுதத் தூண்டியது பசுமைநடையில் எனது சுயபுராணத்தை.

முதன்முதலில் பசுமநடை பற்றி நான் அறிந்தது முகநூல் வாயிலாக. அப்போது தான் காவல்கோட்டம் நாவலை வாசித்து முடித்திருந்த நேரமென்பதால் எனக்கு இம்மலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் – ஞாயிறன்று அதிகாலை 6:30 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் கூட வேண்டுமென முகநூலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நான், உடன் தம்பி சந்தோசோடு 6.30 மணிக்கு அங்கிங்கு விசாரித்து நேரே மலைக்கே சென்றுவிட்டேன். ஆனால் சொன்ன நேரத்தில் யாரும் அங்கு இல்லாதது கண்டு இருவருமே ஏமாற்றமடைந்தாலும், அதிகாலை வேலையில் தூக்கம் கெடுத்து, எங்களின் ஆர்வம் கெடுத்து ஏமாற்றத்தின் வடு உள்ளிருக்க இருவருமே ஏதேதோ சமாதானம் சொல்லி தேற்றிக்கொண்டோம். பிறகு வந்த கையோடு திரும்பிச் செல்லாமல் நாமாக சுற்றிப் பார்க்கலாமென முடிவெடுத்து சுற்றிமுடித்த கையோடு அந்த அதிகாலை நேரம் மலை எங்களுக்குள் ஏற்படுத்திய பரவசமும், அந்த ரம்மியமான சூழலும் தந்த மிதப்பில் அங்கேயே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து வர எங்களுக்குள் பழைய உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலிருந்து கையசைத்தவாறே உற்சாகம் தாளாது கீழிறங்கி வந்து கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். பிறகு நேரே எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் சென்று  அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்வமிகுதியில் “நீங்க ரொம்ப லேட் சார், நாங்க இங்க 6.30 க்கெல்லாம் வந்துட்டோம்” என்க, அவர் எங்களிடம் 6.30 மணிக்கு நாங்கள் வரச் சொன்ன இடம் பல்கலை வாயில் என பதிலுரைக்க, ஹி ஹி என அசடு வழிந்துகொண்டே பேசிச் சென்றோம். பிறகு அவர் இதை நாங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே ஒருங்கிணைக்கிறோம் என்றுகூற எனது எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு நிகழ்வில் ஒன்றிணைந்தேன். பேராசிரியர் சுந்தர்காளி இடங்களின் சிறப்பை விளக்க அதன்பிறகு எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. தம்பி சந்தோசிடம் நான், “தம்பி நாம இங்க ஒரு வேலை கூட செய்யாம சோறு சாப்பிட்டா நமக்கு உடம்புல ஒட்டாதுடா. அதனால எல்லோருக்கும் பரிமாறிட்டு கடைசியா நாம சாப்பிடுவோம்” எனக்கூறி ஏதேனுமொரு வகையில் நமது பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற முனைப்புடன் தன்னார்வமாக வேலை செய்தோம்.

அங்கேயே அடுத்தநடை மாங்குளம் என அறிவிக்க, நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனிடம் மாங்குளத்தில் எனது நண்பர்கள் உள்ளனர், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். இங்கு எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு முன்புவரை அவருடனான எனது அறிமுகம் அவரை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்தது மட்டுமே. பிரபலங்கள் எல்லோரும் தனித்தே இருப்பார்கள் என்று மற்றவர்களைப் போலவே எனக்கும் எண்ணமுண்டு. ஆனால் இவர் விதிவிலக்கானவர். அவருடன் பழகிய பிறகே தெரிந்தது அவரது எழுத்துக்கள் அனைத்தும் மக்களுக்கானவை. மக்களின் தேவைகளை, உணர்வுகளை, வலிகளை, உண்மைகளை பிரதிபலிப்பவை. மக்களிடமிருந்து தனித்திருந்தால் மக்களுக்கான எழுத்து எப்படி உருவாகும்? இவர் சமூகவெளியில் எப்போதும் சகமனிதனாக பயணிப்பதையே விரும்பும் ஒரு சாதாரணன். சாதாரணர்களுக்காகவே எழுதும் சாமானியன். அந்த நிகழ்விற்குப் பிறகு அவர் என்னை ஞாபகம் வைத்து அழைப்பாரென நான் நினைக்கவேயில்லை. அவர் அழைத்ததன் நோக்கம் மாங்குளம் சென்று அடுத்த நடைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு. ஒரு நடை நடத்துவதில் உள்ள சிரமம், அதற்கான முன்தயாரிப்புகள், நேர்த்தி என ஒவ்வொன்றும் ஒரு நிர்வாகம் பயிலும் மாணவனுக்கும், அத்துறையிலிருப்பவர்களுக்குமான படிப்பினை. அதன்பிறகு ஒவ்வொரு நடையிலும் என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டதை கேட்கவும் வேண்டுமா?

இயல்பில் சமூகப்பணி படித்த எனக்கு பசுமைநடை கற்பித்த பாடம், ஒரு தன்னார்வமிக்க சமூகத்தை எப்படி கட்டமைக்க வேண்டுமென்பது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், இன, மத, சாதி, வகுப்புகளைச் சேர்ந்தவர்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது பசுமைநடை. இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கமிருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒரே தளத்தில், தங்களது சுய அடையாளங்களை விடுத்து பசுமநடையின் உறுப்பினர்களாக மட்டுமே இயங்குவதென்பது சாதரணமாக சாத்தியமாகிவிடக்கூடிய ஒன்றில்லை. இங்கு கிடைக்கும் மரியாதையும், அங்கீகாரமும் வயது முதிர்வினாலோ, தங்கள் துறையில் வித்தகர்களாக இருப்பதினாலோ, பெரும்பொருள் படைத்தவர்கள் என்பதினாலோ, சமூகத்தில் பெரும்புள்ளிகள் என்பதினாலோ அல்ல. முற்றாக தன்னார்வமான உழைப்பினால் மட்டுமே கிடைக்கப்பெறுவது. உழைக்கும் எவரையும், எப்போதும், இங்கு எல்லோரும், வணங்கத் தயார். எந்தவித பொருட் பிண்ணனியும் இல்லாது துணிந்து ஒரு விருட்சத் திருவிழா நடத்தியது முழுவதுமாக இந்த தன்னார்வமான உழைப்பை நம்பியும், எழுத்தாளர்.முத்துக்கிருஷ்ணனின் தீர்க்கமான பார்வையின் உந்துதலினாலும் மட்டுமே.

இப்படி கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்கும் பசுமைநடை, சமூகவெளியில் செயல்படும் அனைவருக்குமான பால பாடம் அல்ல பட்ட மேற்படிப்பு.